அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டங்கள் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அண்ணா தொழிற்சங்கத்தின் ஆலோசனைக் கூட்டங்கள்  10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 07,2016,

சென்னை : உள்ளாட்சித்தேர்தல் பணிகள் தொடர்பாக வரும் 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை மாவட்ட வாரியாக அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு வருமாறு:-

அ.தி.மு.க அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் சார்பில் கழக அரசின் சாதனைகளை, மக்கள் நலத்திட்டங்களை தொழிலாளர்களிடையே, பொதுமக்களிடையே விளக்குதல், அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆற்ற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் பணிகள், இணைப்புச் சங்கங்களின் செயல்பாடுகளை ஊக்குவித்தல் உள்ளிட்ட பணிகளை முனைப்புடன் மேற்கொள்வது சம்பந்தமாக 10-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களின் நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்களின் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறும்.

10-ம் தேதி காலை 10 மணி – நாகர்கோவில், மாலை 4 மணி – திருநெல்வேலி, 11-ம் தேதி காலை 10 மணி – மதுரை, மாலை 4 மணி – திண்டுக்கல், 13-ம் தேதி காலை 10 மணி -கோவை, மாலை 4 மணி – ஈரோடு, 14-ம் தேதி காலை 10 மணி – தருமபுரி, 4 மணி – சேலம், 17-ம் தேதி காலை 10 மணி – திருச்சி, மாலை 4 மணி – காரைக்குடி, 18-ம் தேதி காலை 10 மணி – கும்பகோணம், மாலை 4 மணி – கடலூர், 20-ம் தேதி காலை 10 மணி – விழுப்புரம், மாலை 4 மணி – திருவண்ணாமலை, 21-ம் தேதி காலை 10 மணி -வேலூர், மாலை 4 மணி – காஞ்சிபுரம், 22-ம் தேதி காலை – சென்னை ஆகிய இடங்களில் ஆலோசனை கூட்டங்கள் நடைபெறும்.

இந்த ஆலோசனைக் கூட்டங்கள் அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னசாமி தலைமையிலும், அண்ணா தொழிற்சங்கப் பேரவை மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும். ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களைச் சேர்ந்த, மாவட்ட அண்ணாதொழிற்சங்கச் செயலாளர்கள், போக்குவரத்துப் பிரிவு மண்டல அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்கள் தங்கள் மாவட்டங்களில் உள்ள இணைப்புச் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், தொழிலாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்திட வேண்டும். இந்த ஆலோசனைக் கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.