அதிமுகவின் கட்சித் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் : அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுகவின் கட்சித் தலைவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான் : அமைச்சர் ஜெயக்குமார்

ஆகஸ்ட் 1 , 2017 ,செவ்வாய்க்கிழமை, 

சென்னை : அதிமுகவின் கட்சித் தலைமை முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். அவர் கட்சியையும், ஆட்சியையும் சிறப்பாக வழிநடத்துகிறார் என்று நிதியமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ”எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை மற்ற மாவட்டங்களில் சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகளை முதல்வர் வழங்கினார்.அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கான கதவுகள் மூடப்படவில்லை, விரைவில் நல்ல முடிவு எட்டப்படும் என்ற நம்பிக்கையில் உள்ளோம். பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டு தான் இருக்கிறது. முடிவு நிச்சயம் எட்டப்படும். முடிவு எட்டப்படும் போது தெரிவிக்கப்படும்.

ஆகஸ்ட் 5 முதல் தினகரன் கட்சிப் பணியில் ஈடுபடப்போவதாக அறிவித்திருப்பது குறித்து கவலையில்லை. எம்ஜிஆர் ஆரம்பித்த இந்த இயக்கத்தை எஃகு கோட்டையாக ஜெயலலிதா உருவாக்கினார். அந்த எஃகு கோட்டை தற்போது முதல்வர் பழனிசாமி தலைமையில் இயங்கி வருகிறது. அவர் வழிகாட்டலில் கட்சியும், ஆட்சியும் சென்று கொண்டிருக்கிறது” என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.