அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்துமே நிறைவேற்றம்: சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வெள்ளி, பெப்ரவரி 19,2016,

சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் இன்று புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட முதல்வர் ஜெயலலிதா, “2011-ஆம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

சட்டப்பேரவையில் அவர் மேலும் கூறியது:

“கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது அதிமுக வெற்றி பெற்று ஆட்சிஅமைத்த பின் தமிழக மக்களின் நலன் காக்கும் வகையில் எவ்வாறெல்லாம் செயல்படும் என்பது பற்றி அப்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் மிகத் தெளிவாக நாங்கள் குறிப்பிட்டிருந்தோம். எம்.ஜி.ஆர். காட்டிய வழியில் எங்களது புனிதப் பயணம் அமையும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.

தமிழகம் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பாதையில் பீடு நடை போட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கல்வி, மருத்துவம், விவசாயம், நதிநீர், அடிப்படைக் கட்டமைப்பு, வீடு, மின்சாரம் மற்றும் தொழில் துறை வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும், தமிழ்

இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் தலை நிமிர்ந்து சொந்தக் காலில் நிற்பதற்கான வழி உருவாக்கப்படும் என்றும் எங்களது லட்சியத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த லட்சியத்தை எய்துவதற்கு துறை தோறும் எடுக்க உள்ள நடவடிக்கைகள் பற்றியும் தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

எங்களது தேர்தல் அறிக்கையில் முதன்மை துறை, உற்பத்தித் துறை மற்றும் சேவைத் துறை ஆகியவை எவ்வாறு மேம்படுத்தப்படும் என்பது பற்றி தெரிவித்திருந்ததோடு, மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், இளைஞர்கள், தாய்மார்கள்,

முதியோர்கள், ஆதரவற்றோர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் என ஒவ்வொரு பிரிவினருக்கும் செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் பற்றியும் வாக்குறுதி அளித்திருந்தோம்.

மூத்த குடிமக்களுக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்ய கட்டணமில்லா பஸ் பாஸ் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை தேர்தல் அறிக்கையில் நாங்கள் அளித்திருந்தோம். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையிலான ஒரு திட்டம் செயல்படுத்தப்படும்.

என்னுடைய இந்த அறிவிப்பின் மூலம் 2011-ஆம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் எங்களால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளுக்கும் மேலாக பல்வேறு நலத் திட்டங்களையும் எனது தலைமையிலான அரசு செயல்படுத்தியுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.