அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா இன்று பொறுப்பேற்பு

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள வி.கே.சசிகலா இன்று பொறுப்பேற்பு

சனி,டிசம்பர் 31,2016,

சென்னை: அதிமுகவின் பொதுச் செயலராக வி.கே. சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.அதிமுகவின் பொதுச் செயலர் அறைக்குச் சென்ற சசிகலா, அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் படத்துக்கு வணக்கம் செலுத்திவிட்டு, பொதுச் செயலர் நாற்காலியில் அமர்ந்தார்.
அதிமுக பொதுச் செயலராக பதவியேற்றுக் கொண்ட சசிகலா, அங்கு, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட, அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

சென்னையில் வியாழக்கிழமை  நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே.சசிகலா பொறுப்பேற்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் போயஸ் தோட்டத்தில் உள்ள சசிகலாவிடம் நேரில் அளிக்கப்பட்டது. நிர்வாகிகளின் வேண்டுகோளைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவியை ஏற்க அவர் ஒப்புதல் தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுக பொதுச் செயலாளராக சசிகலா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கான நிகழ்வு சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் நடைபெற்றது. இதற்காக, கட்சி நிர்வாகிகள் அனைவரும் காலை 11.30 மணிக்கு முன்னதாகவே தலைமை அலுவலகத்துக்கு வந்து முன்னேற்பாடுகளை செய்தனர்.
பொதுச் செயலராக பொறுப்பேற்கும் முன், எம்.ஜி.ஆர்., சிலைக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு,அதிமுக பொதுச் செயலராக பொறுப்பேற்றுக் கொண்ட சசிகலா, அதிமுக தொண்டர்கள் முன்னிலையில் தனது முதல் உரையை நிகழ்த்தினார். கண்ணீர் மல்க தனது உரையை அவர் ஆற்றினார்.

அவர் பேசியதாவது, அம்மாவை என்றும் நெஞ்சத்தில் சுமந்து வாழும் சகோதர, சகாதரிகளே வணக்கம்.

தமிழகத்தை வழி நடத்திட்ட அம்மா நம்முடன் இல்லாத நிலையில், இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும், கழகம் தான் தமிழகத்தை ஆளும் என நம் அம்மா விட்டுச் சென்ற நம்பிக்கையை காப்பதற்காக நாம் இங்கு கூடியிருக்கிறோம்.

நமக்கு பெருமைத் தேடித்தந்த, இயக்கத்தின் இதயமாக, ஒவ்வொருவரின் இதயத்தின் இயக்கமாக, எனக்கு எல்லாமுமாய், எனக்கு மட்டும் அல்ல நம் அனைவருக்கும் எல்லாமுமாய் திகழ்ந்த இதய தெய்வம் அம்மாவை வணங்குகின்றோம்.

என்னை கழகப்பொதுச் செயலராக ஒரு மனதாகத்தேர்வு செய்து அம்மாவின் வழியில் கழகப்பணியாற்றிட என்னைப் பணித்தமைக்காக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆயிரம் ஆயிரமாயிரம் கூட்டங்களுககு அம்மாவுடன் சென்றிருக்கிறேன். ஏறத்தாழ 36 ஆண்டுகளாக அம்மாவுடன் கலந்து கொண்டேன். ஆனால் இன்று மேடைக்கு வந்து உங்களிடைய பேசும் சூழல் (கண்ணீரை துடைத்தபடி) எனக்கு ஏற்பட்டிருக்கிறது. உங்கள் அன்புக் கட்டளையை ஏற்க வேண்டிய கடமை எனக்கு உண்டு. கற்பனை செய்து கூட பார்க்காத ஒன்று நடந்துவிட்டது.

தலையில் இடி வந்து விழுந்ததைப்போல நன்கு உடல் நலம் தேறி வந்த நம் அம்மா, நம்மை விட்டு பிரிந்து விட்டார்.தன்னை நம்பி வந்த யாரையும் கைவிடாதவர், இன்று தனது மரணத்தின் மூலம் நம் அனைவரையும் கைவிட்டுவிட்டார்.

நம் அம்மாவுக்கு இந்த இயக்கம் தான் வாழ்க்கை. எனக்கோ அம்மா தான் வாழ்க்கை.

மருத்துவர்களின் போராட்டத்தோடு,கோடானு கோடி தொண்டர்களின் வழிபாடும் ஒன்று சேர, அம்மாவை காப்பிற்றிவிடும் என்று நம்பினேன். போயஸ் தோட்டத்துக்கு வருவார் என்று நம்பினேன். ஆனால், நம்பிக்கை நிறைவேறவில்லை என்று கண்ணீர் மல்க உரையாற்றினார்.