அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

அதிமுக பொதுச்செயலாளர் விவகாரம் : மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்

வியாழக்கிழமை, மார்ச் 16, 2017,

புதுடெல்லி : அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிமுகவின் தற்காலிக பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு செய்யப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் மனு அளித்தனர். இந்தப் புகாருக்கு பதில் அளிக்கும்படி சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு அதிமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பதில் அனுப்பினார். அதை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம், சசிகலாதான் பதில் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதையடுத்து, 70 பக்கங்கள் கொண்ட பதிலை வழக்கறிஞர்கள் மூலம் சசிகலா அனுப்பினார். அதில், அதிமுக சட்ட விதிகளின்படியே பொதுச் செயலாளர் நியமனம் நடந்ததாகவும், தன்னை முன்மொழிந்தவர்களே இப்போது எதிர்ப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

சசிகலாவின் பதிலுக்கு மார்ச் 14-ம் தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. அதன்படி, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் 61 பக்கங்கள் கொண்ட விளக்கத்தை தயாரித்தனர். அதை தேர்தல் ஆணையத்திடம் மைத்ரேயன் எம்.பி. 14-ம் தேதி வழங்கினார்.

‘பொதுச் செயலாளரை நியமிக்கும் அதிகாரம் கட்சி பொதுக் குழுவுக்கோ, செயற்குழுவுக்கோ கிடையாது. தற்காலிக பொதுச் செயலாளர் என்ற பதவியே அதிமுகவில் இல்லை. எனவே, சசிகலா நியமனம் செல்லாது. விதிகளை மாற்றுவதற்கு மட்டுமே பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என அதிமுக விதிகளில் கூறப்பட்டுள்ளது’ என விளக்கக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் நசீம் ஜைதியை டெல்லியில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் நேரில் சந்தித்தார். அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ”அதிமுக சட்டவிதிக்கு மாறாக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்திடம் எடுத்துரைத்தோம். தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை மீண்டும் நடத்த வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்பாகவே இரட்டை இலை சின்னத்தை எங்களுக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தோம்” என்றார்.

இந்நிலையில், இரு தரப்பினரின் கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் நியமன விவகாரத்தில் மார்ச் 20-ம் தேதிக்குள் முடிவை அறிவிப்பதாகவும் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.