அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் ; பக்ரித் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

அமைதியும் மகிழ்ச்சியும் மலரட்டும் ; பக்ரித் திருநாளை முன்னிட்டு இஸ்லாமிய பெருமக்களுக்கு  முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்த்து

செவ்வாய், செப்டம்பர் 13,2016,

சென்னை ; உலகெங்கும் இறை உணர்வும், தியாகச் சிந்தனைகளும் பரவட்டும் அமைதியும், மகிழ்ச்சியும் மலரட்டும் என்று இஸ்லாமியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பக்ரீத் திருநாள்  வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட  வாழ்த்துச் செய்தி;

இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் உயரிய எண்ணத்தை பறைசாற்றும்  திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனே எல்லாம், அவருக்கு இணையாக எதுவும் இல்லை எனும் இறைப் பற்றோடு வாழ்ந்து, இறைவனின் விருப்பத்தையே தனது விருப்பமாகக் கொண்டு, இறைவனின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனது ஒரே மகன் இஸ்மாயிலை பலியிட துணிந்த இறைத்தூதர் இப்ராஹிமின் புனிதமும், அர்ப்பணிப்பும் ஒருங்கே கலந்த தன்னலமற்ற தியாக வாழ்வின் மேன்மையைப் போற்றும் நன்னாளே பக்ரீத் திருநாளாகும்.

ஏழை, எளியோருக்கு உணவளியுங்கள், இனிமையான சொற்களையே பேசுங்கள், உள்ளத்திலிருந்து பகைமையை நீக்குங்கள், பிறரை பற்றி குறை கூறாதீர்கள், தான தர்மம் செய்யுங்கள், தவறிழைப்போரை மன்னித்துவிடுங்கள்  போன்ற திருக்குரானின் உயரிய போதனைகளை மக்கள் மனதில் நிலை நிறுத்தி உண்மையுடனும், கருணையுடனும் வாழ்ந்தால், உலகில் அன்பும், அறமும், மனிதநேயமும் தழைத்தோங்கும். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில், உலகெங்கும் இறை உணர்வும், தியாகச் சிந்தனைகளும் பரவட்டும், அமைதியும், மகிழ்ச்சியும் மலரட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு  முறை எனது பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச்செய்தியில் குறிப்பி்ட்டுள்ளார்.