அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

திங்கள் , ஜனவரி 04,2016,

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு பொங்கல் போனஸ் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம், அரசுக்கு ரூ.326.85 கோடி செலவு ஏற்படும்.
இதுகுறித்து, முதல்வர் ஜெயலலிதா ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் அதாவது போனஸ்-சிறப்பு மிகை ஊதியம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
2014-2015 ஆம் நிதி ஆண்டிற்கு சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3 ஆயிரம் உச்சவரம்புக்கு உட்பட்டு 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஏ மற்றும் பி பிரிவைச் சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறுவோரும் போனஸ் பெறத் தகுதியானவர்கள்.
அதன்படி, முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், சிறப்புக் கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள், கிராம உதவியாளர்கள், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் சிறப்பு கால முறை ஊதிய விகிதத்தில் பணிபுரிந்து வரும் பஞ்சாயத்து உதவியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தாற்காலிக உதவியாளர்கள், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றுபவர்கள் மற்றும் ஒரு பகுதி தினக் கூலிகளாக பணியாற்றி பின்னர் நிரந்தரப் பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு-இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் மிகை-சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும்.
ஓய்வூதியம்-குடும்ப ஓய்வூதியம்: தமிழகத்தில் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள், முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் (தலையாரி மற்றும் கர்ணம்) ஆகியோருக்கு ரூ.500 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இதனால் அரசுக்கு 326 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
சுமார் 20 லட்சம் பேர்: தமிழகத்தில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 14 லட்சம் பேருக்கு அதிகமாகவும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமாகவும் உள்ளனர். அதன்படி, தமிழக அரசின் பொங்கல் போனûஸ 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பெறுவார்கள் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.