அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் செய்வோம் சென்னையில் நடைபெற்ற “Amma My Leader” நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான இளைஞர்கள் சூளுரை

அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக  தீவிர பிரச்சாரம் செய்வோம் சென்னையில் நடைபெற்ற “Amma My Leader” நிகழ்ச்சியில் கோடிக்கணக்கான இளைஞர்கள் சூளுரை

ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 13, 2016,

தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா அறிவுரையின் பேரில், கழகத்தின் அனைத்து அமைப்புகளும் தீவிர தேர்தல் பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரீனாவில் நடைபெற்ற “Amma My Leader” நிகழ்ச்சி, இளைஞர்களிடையே எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

தமிழகம், புதுச்சேரி, கேரள ஆகிய மாநிலங்களில் வரும் மே மாதம் 16-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. அஸ்ஸாம் மாநிலத்தில், 2 கட்டங்களாகவும், மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்களாகவும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை அ.இ.அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கழகத்தின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தோர், இளைஞர்களிடையே முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையில் நேற்று “Amma My Leader” என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இளைஞர்கள், இளம்பெண்கள், பல்வேறு தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் சாதனைகளை பொதுமக்களிடையே எடுத்துரைத்தனர். “My Leader” என்ற தலைப்பில், சென்னை உள்பட மாநிலம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் பிரச்சார யுக்திகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவை தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டுள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள், வரும் சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இசைக் கருவிகள் இல்லாமல் அரங்கேற்றப்பட்ட இசை நிகழ்ச்சி பொதுமக்களை கவரும் வகையில் அமைந்தது.