அ.தி.மு.க ராஜ்யசபை வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

அ.தி.மு.க ராஜ்யசபை வேட்பாளர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

வெள்ளி, மே 27,2016,

சென்னை:அ.தி.முக சார்பில் ராஜ்ய சபை உறுப்பினர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் சென்னையில் நேற்று முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவியிடங்களுக்கு வரும் 11-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க சார்பில் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர் வைத்திலிங்கம் அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவுசெயலாளர் நவநீதக்கிருஷ்ணன், குமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோரை அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வேட்பாளர்களாக அறிவித்துள்ளார். மாநிலங்களவை அ.தி.மு.க வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்ட நால்வரும் முதல்வர் ஜெயலலிதாவை சென்னையில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதுகுறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும்,  தமிழ்நாடு முதல்வருமான ஜெயலலிதாவை வருகின்ற 11.ம்தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற மாநிலங்கள் அவைத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ள, தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அ.தி.மு.க செயலாளர். ஆர்.வைத்திலிங்கம், அ.தி.மு.க வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர் நவநீதகிருஷ்ணன், கன்னியாகுமரி மாவட்ட வழக்கறிஞர் பிரிவுஇணைச் செயலாளர் விஜயகுமார், முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.   இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.