அ.தி.மு.க. விருப்ப மனு சமர்ப்பிக்க மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம்:முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

அ.தி.மு.க. விருப்ப மனு சமர்ப்பிக்க மேலும் 3 நாட்களுக்கு கால அவகாசம்:முதலமைச்சர்  ஜெயலலிதா அறிவிப்பு

புதன்கிழமை, பிப்ரவரி 03, 2016,

அ.தி.முக. பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–

நடைபெற உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தல்களில், அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகத்தில் 20.1.2016 முதல் 3.2.2016 வரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம் என ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டிருந்தேன்.

தற்போது கழக உடன் பிறப்புகள் பலரும் விருப்ப மனு பெறுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துத் தர வேண்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, வருகின்ற 6.2.2016 (சனிக்கிழமை) மாலை 5 மணி வரை கழக உடன்பிறப்புகள் உரிய கட்டணத் தொகையைச் செலுத்தி விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

நேற்று மாலை வரை சுமார் 19 ஆயிரம் பேர் அதி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அ.தி.மு.க.வில் இதுவரை இல்லாத அளவுக்கு ஏராளமான புதுமுகங்களும், பெண்களும் தேர்தலில் போட்டியிட விருப்பத்துடன் மனு கொடுத்துள்ளனர்.

விருப்ப மனு கொடுப்பதற்கு இன்று (புதன்கிழமை) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் அ.தி.மு.க. தலைமை கழகத்தில் இன்று அ.தி.மு.க. பிரமுகர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

இன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் நிறையபேர் போட்டி போட்டு விருப்ப மனுக்களை பெற்றனர். முதல்– அமைச்சர் ஜெயலலிதா பெயரில் இன்றும் நிறைய பேர் மனு செய்தனர். 234 தொகுதியிலும் ஜெயலலிதா போட்டியிட கோரி அ.தி.மு.க. பிரமுகர்கள் விருப்ப மனு கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்று மதியம் வரை சுமார் 800 பேர் விருப்ப மனு பெற்றனர். எனவே அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் எண்ணிக்கை சுமார் 20 ஆயிரத்தை இன்று எட்டி இருப்பதாக தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியிலும் தேர்தலில் போட்டியிட இந்த அளவுக்கு தொண்டர்கள் மனு செய்யவில்லை. முதல்– அமைச்சர் ஜெயலலிதா தங்களுக்கும் ஒரு வாய்ப்பு தருவார் என்ற நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான அ.தி.மு.க.வினர் மனு கொடுத்துள்ளனர்.குக்கிராமங்களை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் கூட இந்த தடவை எதிர்பார்ப்புடன் மனு கொடுத்துள்ளனர்.