அ.தி.மு.க வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

அ.தி.மு.க வெற்றி; தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

வெள்ளி, மே 20,2016,

சென்னையில் அதிமுக தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையும், முதல்வர் ஜெயலலிதாவின் வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் பகுதியும் கட்சியினரின் வெற்றிக் கொண்டாட்டங்களால் விழாக் கோலம் பூண்டது.
 சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஓரிரு மணி நேரத்திலேயே அதிமுக முன்னிலை பெற்று வந்தது.
 இதையடுத்து, போயஸ் கார்டன் பகுதியில் நூற்றுக்கணக்கான அதிமுகவினர் கூடினர். இதனால் அந்தப் பகுதியே விழாக்கோலம் பூண்டது. காலை 10 மணியளவில் அதிமுக வெற்றி பெற்று விடும் என உறுதியாகத் தெரியவந்தவுடன், அதிமுகவினர் வெற்றிக் கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். ஆடல், பாடல்களுடன் இனிப்பு வழங்கினர். பட்டாசுகளும் வெடிக்கப்பட்டன. இதேபோல், திருநங்கைகளும் ஆடல் பாடல்களில் ஈடுபட்டனர்.
 விழுப்புரத்தைச் சேர்ந்த இளைஞர் பாசறையைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அதிமுக கொடிகளையும், முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை நெஞ்சில் வரைந்தவாறும் வந்தனர்.
 இதுகுறித்து ரமேஷ் கூறிகையில், “அதிமுக நிச்சயமாக வெற்றி பெறும் என்பதை எதிர்பார்த்தோம். அதனால் புதன்கிழமை இரவே சென்னை வந்து தங்கியிருந்தோம் என்றார்.
 இதேபோல், அதிமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையிலும் அதிமுக தொண்டர்கள் திரண்டு பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.