இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் மீது கோவையை சேர்ந்த எழுத்தாளர் புகார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் தா.பாண்டியன் மீது கோவையை சேர்ந்த எழுத்தாளர் புகார்

சனி, ஜூன் 04,2016,

திருவள்ளுவர் பற்றி தான் எழுதிய நூலின் தலைப்பையும், கருத்தையும் திருடி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளதாக கோவையை சேர்ந்த எழுத்தாளர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.

கோவை புலியகுளம் பகுதியை சேர்ந்த எழுத்தாளர் வெங்கடாசலம் என்பவர் கோவை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், கடந்த 2013ம் ஆண்டு திருவள்ளுவரின் அரசியல் பொருளாதார கொள்கை என்ற நூலை எழுதி வெளியிட்டுள்ளதாகவும், அரசு நூலகத்தில் வைக்க ஒப்புதலும் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் இந்த புத்தகத்தின் தலைப்பையும், கருத்தையும் சிறிது மாற்றம் செய்து திருவள்ளுவரின் அரசியல் பொருளாதாரம் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பாண்டியன் புத்தகமாக வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாகவும், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாட உள்ளதாகவும் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.