வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறேன் : நன்றி அறிவிப்பு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருக்கிறேன் : நன்றி அறிவிப்பு கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா பெருமிதம்

புதன், ஏப்ரல் 20,2016,

இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் வளமான, அமைதியான, எழுச்சியான தமிழ்நாட்டை உருவாக்கி இருப்பதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நன்றி அறிவிப்பு கடிதம்

வருகிற சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க.வுக்கு பல்வேறு கட்சிகளும், அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா அந்த அமைப்புகளுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த 5 ஆண்டுகளில் இந்திய நாடே திரும்பிப் பார்க்கும் வகையில் உலக நாடுகள் பலவற்றில் விவாதிக்கப்படும் வகையிலும், சாதாரண ஏழை, எளிய உழைக்கும் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வு கண்டு ஒரு வளமான, அமைதியான, எழுச்சியான தமிழகத்தை நான் உருவாக்கி இருக்கிறேன்.

‘மக்களால் நான், மக்களுக்காகவே நான்’ என்பதை உளப்பூர்வமாக உணர்ந்து, இந்த தேர்தல் களத்தில் மக்களோடு கைகோர்த்து மகத்தான வெற்றியை நோக்கி அ.தி.மு.க. நடைபோடுகிறது.

இதயம் கனிந்த நன்றி

வருகின்ற மே 16-ந்தேதி நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலில், அ.தி.மு.க. தங்கள் கட்சியின் உளப்பூர்வமான ஆதரவை அளித்துள்ளமைக்கு என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் மக்கள் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் எனது தலைமையிலான நல்லாட்சி தொடர்ந்திடும் வகையில், அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு தாங்களும், தங்கள் கட்சியின் நிர்வாகிகளும், தொண்டர்களும் தீவிரமாக களப்பணி ஆற்றிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.