இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு:தமிழக அரசு அறிவிப்பு

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு:தமிழக அரசு அறிவிப்பு

வியாழன் , ஜனவரி 14,2016,

இந்த ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு அடுத்த மாதம் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இந்த ஆண்டு, ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் தமிழகத்தைச் சேர்ந்த இஸ்லாமியப் பெருமக்களிடமிருந்து, சில விதி முறைகள் மற்றும் நிபந்தனைகளுக்குட்பட்டு மும்பை, இந்திய ஹஜ் குழு சார்பாக, தமிழ்நாடு மாநில ஹஜ் குழு, ஹஜ் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

சென்னை நுங்கம்பாக்கம் மகாத்மா காந்தி சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலரிடமிருந்து ஹஜ் 2016-க்கான விண்ணப்பப் படிவங்களை இன்று முதல் பெற்றுக் கொள்ளலாம் அல்லது விண்ணப்பங்களை www.hajcommittee.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும், விண்ணப்பப்படிவத்தை நகல்கள் எடுத்தும் உபயோகப்படுத்தப்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாழ்நாளில் ஒருமுறை மட்டும் இந்திய ஹஜ் குழு மூலமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்ளலாம் என்னும் விதிமுறையை இந்திய ஹஜ் குழு செயற்படுத்தி வருகிறது – அடுத்த மாதம் 8-ம் தேதி அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்டு, குறைந்தது அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 10-ம் தேதி வரையில் செல்லத்தக்க கணினி வழி பதிவு செய்யக்கூடிய பன்னாட்டு பாஸ்போர்ட்டை விண்ணப்பதாரர்கள் வைத்திருக்கவேண்டும் – IFS குறியீடு உடைய வங்கியிலுள்ள தங்களின் கணக்கு விவரங்களை மனுதாரர்கள் அளிக்கவேண்டும் – பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவிற்கு அடுத்த மாதம் 8-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.