குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே செல்போனுக்கு தகவல் : நியாய விலைக்கடைகளில் புதிய வசதி அறிமுகம்

குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே செல்போனுக்கு தகவல் : நியாய விலைக்கடைகளில் புதிய வசதி அறிமுகம்

செவ்வாய், ஜூன் 28,2016,

தமிழகத்தில் நியாய விலைக்கடைகளில், இருப்பு உள்ள பொருட்கள் குறித்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக, புதிய ஸ்மார்ட் கார்டு வழங்க, முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவின்பேரில், உணவு மற்றும் கூட்டுறவுத் துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், ஸ்மார்ட் அட்டைகளுக்கு முந்தைய நடவடிக்கையாக, குடும்ப அட்டைகளை கணினி மூலம் ஸ்கேன் செய்து, அந்த அட்டைகளில் உள்ள விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகள் தற்போது, சோதனை அடிப்படையில் ரேஷன் கடைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னை மந்தவெளிப்பாக்கம் மகளிர் கூட்டுறவு நியாயவிலைக்கடையில், நுகர்வோரிடம் இருந்து பெறப்பட்ட குடும்ப அட்டைகள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன.

ஒருமுறை பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைதாரரின் செல்போனுக்கு, அவர் வாங்க வேண்டிய பொருட்கள் குறித்து குறுந்தகவல் அனுப்பப்படும். அதன் அடிப்படையில், பயனாளிகள் தங்களுக்கு வேண்டிய பொருட்களை கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. விரைவில் இத்தகைய வசதி தமிழகம் முழுவதும் அறிமுகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.