இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் : முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டம் :  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

வியாழன்,ஜனவரி 5,2017,

பொங்கல் திருநாளை முன்னிட்டு 1 கோடியே 62 லட்சம் பேருக்கு இலவச வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விவசாயத்தை அடுத்து கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத் தொழிலாக நெசவுத் தொழில் விளங்கி வருகிறது. கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு அளிக்கவும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், 1983-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆரால் இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.

இதன்படி ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளான பொங்கல் திருநாளையொட்டி விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் மூலம் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவதோடு மட்டுமல்லாமல், கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் மூலம் தரமான வேட்டி, சேலைகளை வழங்கிடும் நோக்கில், 2014-ம் ஆண்டு பொங்கல் பண்டிகை முதல் பாலிகாட் சேலைகளை வழங்கிட முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டார்.

அதன்படி, புரட்சித் தலைவி அம்மாவின் வழி காட்டுதலின்படி செயல்படும் தமிழ்நாடு அரசு, 2017-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், 1 கோடியே 62 லட்சத்து 42 ஆயிரத்து 717 சேலைகளும், 1 கோடியே 62 லட்சத்து 24 ஆயிரத்து 223 வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன. இத்திட்டத்திற்கென தமிழ்நாடு அரசு 486 கோடியே 36 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

பொங்கல் திருநாளையொட்டி இந்த ஆண்டிற்கான விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இன்று தலைமைச் செயலகத்தில் 7 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி. உதயகுமார் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன், தமிழ்நாடு அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், முதன்மைச் செயலாளர் -வருவாய் நிர்வாக ஆணையர் முனைவர் சத்ய கோபால், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை முதன்மைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், வருவாய்த் துறைச்செயலாளர் டாக்டர் சந்தர மோகன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.