ஈரானில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

ஈரானில் கைது செய்யப்பட்ட 5 மீனவர்களை விடுவிக்க இந்திய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுங்கள்: பிரதமருக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம்

சனி, மே 28,2016,

சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் ஈரான் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டு, ஈரான் சிறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க பிரதமர் இந்திய தூதரகம் மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முதலமைச்சர்  ஜெயலலிதா பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ஈரான் கடலோர காவல் படையினரால் தமிழகத்தைச் சேர்ந்த 5 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, காவலில் வைக்கப்பட்டு அனுபவித்து வரும் வேதனையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வர விரும்புவதாக தெரிவித்துள்ளார். சவுதி அரேபியாவைச் சேர்ந்த திரு. அலி ஜூரோஹி என்பவரின் கீழ் இவர்கள் 5 பேரும் சவுதி அரேபியாவில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 5 மீனவர்களும், கடந்த ஏப்ரல் மாதம் 23-ம் தேதி சவுதி அரேபியாவில் உள்ள கட்டீஃப் மீன்பிடித் தளத்தில் இருந்து இயந்திரப் படகு மூலம் மீன்பிடிக்க புறப்பட்டனர். அப்போது, அவர்கள் தற்செயலாக ஈரான் கடல் எல்லைக்குள் தவறுதலாக நுழைந்துவிட்டனர். இம்மீனவர்களை கடந்த ஏப்ரல் மாதம் 24-ம் தேதியன்று ஈரான் கடலோர காவல் படையினர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த இந்த 5 மீனவர்களும் ஈரானில் உள்ள டெஹ்லோரான் என்ற இடத்தில் அமைந்துள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அப்பாவி ஏழை மீனவர்களை உடனே விடுதலை செய்ய பிரதமர் தனிப்பட்ட முறையில் தலையிட்டு டெஹ்ரானிலும், சவுதி அரேபியாவிலும் உள்ள இந்திய தூதரகம் மூலம் தக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த விவகாரத்தை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வருவதாக முதலமைச்சர் தமது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.