உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 25, 2016,

சென்னை  ; ஏசுபிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில் உலகெங்கும் அன்பும், அமைதியும் நிலவட்டும், நலமும், வளமும் பெருகட்டும் என கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், கிறிஸ்துவ மக்களின் மேம்பாட்டிற்காக, மறைந்த  முதல்வர் ஜெயலலிதா  வகுத்த சீரிய திட்டங்களை அரசு தொடர்ந்து செயல்படுத்தும் என்றும் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இயேசுபிரான் அவதரித்த கிறிஸ்துமஸ் திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழும் கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் தனது இனிய கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

“அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன்” என்று அன்பின் சிறப்பை உலகிற்கு எடுத்துரைத்த இயேசுபிரான் பிறந்த இத்திருநாளில், அவர் போதித்த தியாகம், இரக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற உயரிய வாழ்க்கை நெறிகளை மக்கள் பின்பற்றி ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டி வாழ்ந்தால் வாழ்வு மேன்மையுறும் – மறைந்த முதல்வர் ஜெயலலிதா கிறிஸ்துவப் பெருமக்களின் நலனிற்காக, இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்துவ மக்கள் இஸ்ரேலில் உள்ள ஜெருசலேம் புனிதப் பயணம் செல்வதற்கு 20 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்தினை 2011-ஆம் ஆண்டு டிசம்பர் திங்களில் செயல்படுத்தினார் – கிறிஸ்துவ மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் இதுவரை 2,340 பேர் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டு பயனடைந்துள்ளதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்துவப் பெருமக்களின் மேம்பாட்டுக்கென  மறைந்த முதல்வர் ஜெயலலிதா வகுத்த சீரிய திட்டங்களை, அவர் காட்டிய வழியில் செயல்படும் நமது அரசு, சிறப்பான முறையில் தொடர்ந்து செயல்படுத்தும் என்று உறுதி கூறி, இயேசு பிரான் பிறந்த கிறிஸ்துமஸ் திருநாளில், உலகமெங்கும் அன்பும் அமைதியும் நிலவட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என்று வாழ்த்தி, கிறிஸ்துவப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை தனது உளம் கனிந்த கிறிஸ்துமஸ் திருநாள் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்வதாக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.