உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவுடன் கூட்டணி : சரத்குமார் அறிவிப்பு

உள்ளாட்சித் தேர்தலிலும் அ.தி.மு.கவுடன் கூட்டணி : சரத்குமார் அறிவிப்பு

வெள்ளி, ஜூலை 15,2016,

சென்னை : உள்ளாட்சி தேர்தலிலும், அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடரும் என்று சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் தனது 62-வது பிறந்த நாளை சென்னை கொட்டிவாக்கத்தில் நேற்று கொண்டாடினார். அவரது மனைவியும் சமத்துவ மக்கள் கட்சியின் மகளிர் அணி செயலாளருமான நடிகை ராதிகா, மகன் ராகுல், மகள் ரேயான், சரத்குமாரின் சகோதரி மல்லிகா ஆகியோர் சரத்குமாருக்கு மலர் கொத்து கொடுத்து இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்தனர். அதனை தொடர்ந்து சமத்துவ மக்கள் கட்சியின் பொருளாளர் சுந்தரேசன் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அப்போது நிருபர்களுக்கு பேட்டியளித்த சரத்குமார் கூறுகையில்.,

உள்ளாட்சி தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்தும் வகையில் அ.தி.மு.க.வுடன் இணைந்து சமத்துவ மக்கள் கட்சி தொடர்ந்து பணியாற்றும். உணவு தானியங்களை பாதுகாக்கும் வகையில் தமிழகத்தில் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். அதற்கு ஆதாரமாக விளங்கும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டும். அரசுடன் இணைந்து கட்சி தொண்டர்கள் இதற்காக உழைக்க வேண்டும். இதுவே என்னுடைய பிறந்தநாள் செய்தியாகும். தற்போது சகிப்புத்தன்மையும், பொறுமையும் குறைந்து வருகிறது. எதற்கெடுத்தாலும் தற்கொலை என்ற முடிவை மேற்கொள்கின்றனர். இது தவறான முன் உதாரணம். வாழ்க்கை வாழ்வதற்கே, அதில் வெற்றி, தோல்வி என்பது சகஜம். மன உளைச்சலை தடுக்க ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது செல்போன், டிவிகளை நிறுத்திவிட்டு குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசவேண்டும்.

இனி மாதத்திற்கு 15 நாட்கள் திரைத் துறையிலும், 15 நாட்கள் அரசியல் வாழ்விலும் ஈடுபடுவேன். இவ்வாறு சரத்குமார் கூறினார்.  பிறந்தநாளையொட்டி நடிகர்கள் சத்யராஜ், பிரபு, தயாரிப்பாளர் தாணு மற்றும் திரை உலகினர் அவருக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.