உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீத வெற்றிக்கு பாடுபட வேண்டும் : நெல்லை மாவட்ட கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் சூளுரை
செவ்வாய், ஜூலை 12,2016,
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில், அ.இ.அ.தி.மு.க. நூறு சதவிகித வெற்றி பெற அயராது பாடுபடுவது என நெல்லையில் நடைபெற்ற கழக செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பாளையங்கோட்டை ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் ரெட்டியார்பட்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு கட்சியின் அமைப்புச் செயலரும், திருநெல்வேலி புறநகர் மாவட்டச் செயலருமான பா.நாராயண பெருமாள் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் மருதூர் கே.ராமசுப்பிரமணியன் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் இ.நடராஜன், வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், கே.பெரியபெருமாள் உள்ளிட்டோர் பேசினர்.
கூட்டத்தில் வேளாண் பெருமக்களின் நலன் கருதி, கூட்டுறவு வங்கிகளில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் மற்றும் நீண்டகால கடன்களை தள்ளுபடி செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 100 யூனிட் கட்டணமில்லா மின்சாரம், ஏழைப் பென்களுக்கு 8 கிராமில் திருமாங்கல்யத்துடன், 50 ஆயிரம் ரூபாய் வரை நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதற்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் 100 சதவிகித வெற்றியை கழகத்திற்குப் பெற்றுத் தந்து, அந்த வெற்றியை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பொற்பாதங்களில் சமர்ப்பிப்பது என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பரமசிவ ஐயப்பன், ரெட்டியார்பட்டி வி.நாராயணன், கூனியூர் ப.மாடசாமி, சி.கேபிரியேல் ராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.