உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள் : உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் சி.சீனிவாசன் வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளியுங்கள் : உறுப்பினர் சேர்க்கை முகாமில் அமைச்சர் சி.சீனிவாசன் வேண்டுகோள்

திங்கள் , ஜூலை 11,2016,

திண்டுக்கல் போடிநாயக்கன்பட்டியில் மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க.வில் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடந்தது. இதற்கு ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வி.டி.ராஜன் தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் மேயர் வி.மருதராஜ் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை படிவங்களை வழங்கினார். அப்போது தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி, பலரும் அமைச்சர் முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் பேசுகையில், முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5 ஆண்டுகளாக தமிழகத்தில் மக்கள் விரும்பும் நல்லாட்சியை வழங்கினார். இதனால் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சியை பிடித்தது. அதன்படி முதலமைச்சர் ஜெயலலிதா பதவியேற்ற சில நிமிடங்களில் முத்தான திட்டங்களை அறிவித்தார். தமிழகத்தின் வளர்ச்சிக்காக மேலும் பல திட்டங்களை நிறைவேற்றுவார். எனவே, உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும். தமிழகம் முழுவதும் 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 50 ஆயிரம் பேரை சேர்க்க இருக்கிறோம். அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே நாளில் சேர்க்கப்பட்டுள்ளனர், என்றார்.

இதில் உதயக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வி.பி.பி.பரமசிவம், தங்கத்துரை, அபிராமி கூட்டுறவு பண்டகசாலை தலைவர் பாரதிமுருகன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள், பகுதி செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.