உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் : அதிமுகவினருக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, ஜூலை 29,2016,

உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில், அதிமுகவினர் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறினார்.

பல்வேறு கட்சிகள், அமைப்புகளில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த 31,834 தொண்டர்களுக்கு  உறுப்பினர் அட்டைகள் வழங்கும் விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில்,முதலமைச்சர் ஜெயலலிதா பேசியது:-

அதிமுகவில் இணைந்துள்ளோரின் அரசியல் வாழ்வில் புது வசந்தம் மலரும். அனைவரும் இன்றைக்கு உள்ள உற்சாகத்தோடு என்றைக்கும் அதிமுகவின் வளர்ச்சிக்கு முழு ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். அனைவரையும் அன்போடு அரவணைத்துச் செல்லும் உண்மையான ஜனநாயக இயக்கம் அதிமுக என்பதால், இனி வரும் காலங்களில் அரசியலில் வெற்றிகளைக் காண்பீர்கள்.

தமிழகத்தில் வாழும் மக்கள் எல்லா வளங்களையும், நலன்களையும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு செயல்படுகிறேன். இதற்காக, என்னையே (ஜெயலலிதா) அர்ப்பணித்து அயராது உழைத்து வருகிறேன்.

அதிமுக அரசு மக்களுக்கு ஆற்றி வரும் மகத்தான பணிகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக மகத்தான வெற்றியைப் பெற்றிடும் வகையில், அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் என்றார்.