ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு : மாறன் சகோதரர்கள் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல்

செவ்வாய், ஜூலை 12,2016,

புதுடெல்லி : ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நேரில் ஆஜரான தயாநிதி மாறன், கலாநிதி மாறன் அவரது மனைவி காவேரி உள்ளிட்டோர் முன்ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, ஏர்செல் நிறுவன உரிமையாளர் சிவசங்கரனை நிர்பந்தப்படுத்தி, அவரது பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கச் செய்ததாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனங்கள் மூலம் சன் குழுமத்தில் ரூ.742.58 கோடி முதலீடு என்ற வகையில் ஆதாயம் அடைந்ததாக அமலாக்கப்பிரிவு குற்றம்சாட்டியுள்ளது.

சன் டைரக்ட் டிவி நிறுவனத்துக்கு (எஸ்.டி.டி.பி.எல்) ரூ.549.03 கோடி, சவுத் ஏசியா எஃப்.எம். நிறுவனத்துக்கு ரூ.193.55 கோடி என ரூ.742.58 கோடி சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறை தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி கலாநிதி, சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் மற்றும் எஸ்.ஏ.எஃப்.எம், எஸ்.டி.டி.பி.எல் ஆகிய இரு நிறுவனங்களை சேர்ந்த 6 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என கடந்த பிப்ரவரி 27-ம் தேதி உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன்படி, நேற்று இவ்வழக்கில் சிறப்பு சிபிஐ நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் தயாநிதி, கலாநிதி, காவேரி கலாநிதி, கே.சண்முகம் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இதையடுத்து, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி தயாநிதிமாறன், கலாநிதி மாறன், காவேரி கலாநிதி மாறன், சவுத் ஏசியா எப்.எம். லிமிடெட் நிர்வாக இயக்குநர் கே.சண்முகம் ஆகியோர் டெல்லி சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீதான விசாரணை வரும் 21-ம் தேதி நடைபெறவுள்ளது.