ஓசூரில் கொள்ளையர் தாக்கியதில் உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

ஓசூரில் கொள்ளையர் தாக்கியதில் உயிரிழந்த காவலர் முனுசாமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி : முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

செவ்வாய், ஜூன் 21,2016,

சென்னை, சங்கிலி பறிப்பு கொள்ளையர்களால் கொல்லப்பட்ட கிருஷ்ணகிரி தலைமைக் காவலர் முனுசாமியின் உயரிய தியாகத்தை போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்றும், அவரது மகளின் உயர்கல்விக்கான செலவை அரசே ஏற்கும் என்று தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

 தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கிருஷ்ணகிரி மாவட்டம், யு.சிங்கிரிப்பள்ளி என்னும் இடத்தில் 15.6.2016 அன்று நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவம் தொடர்பாக, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர காவல்நிலையத்தைச் சேர்ந்த உதவி ஆய்வாளர் கண்ணன், தலைமைக் காவலர்கள் முனுசாமி, தனபால், சிப்காட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் நாகராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், பாரதிதாசன் நகர் அருகே செயின் பறிப்பு சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களை பிடிக்க முற்படும் போது, அவர்கள் கத்தியால் தாக்கியதில் ஓசூர் காவல் நிலைய தலைமைக்காவலர் முனுசாமி என்பவர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். இந்த துயரச் சம்பவத்தால் மிகவும் மன வேதனைக்கு ஆளாகிய நான், உயிரிழந்த முனுசாமி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டதுடன் 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கவும் உத்தரவிட்டிருந்தேன்.

தற்போதுள்ள அரசு விதிமுறைகளின்படி 5 லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டிருந்தாலும், கொள்ளையரைப் பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்த முனுசாமியின் குடும்பத்தினருக்கு இது போதுமான நிவாரணம் ஆகாது என்பதே எனது திடமான கருத்தாகும். எனவே முனுசாமி உயரியதியாகத்தைக் கருத்தில் கொண்டு அன்னாரது குடும்பத்திற்கு நிவாரண உதவியாக ஒருகோடி ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இதுபோன்ற வீரதீர செயல்களில் உயிரிழப்பு அல்லது பலத்த காயங்களுக்கு உள்ளாகும் காவல்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய கருணைத்தொகையை உயர்த்தி நிர்ணயிக்கவும், அதற்காக தற்போதுள்ள அரசாணையை மாற்றி புதிய அரசாணையை வெளியிடவும் தலைமைச் செயலருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த முனுசாமி  மகள் ரக்ஷனாவின் உயர் கல்விச் செலவை தமிழக அரசே ஏற்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிக்கையில் தெரிவித்துள்ளார்.