ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு

ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு கோவை வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ அருண்குமார் ஆதரவு

திங்கட்கிழமை, மார்ச் 13, 2017,

சென்னை : முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுக அணிக்கு அதிமுக கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து தனியாகப் பிரிந்த ஓ.பி.எஸ். அணியில் இப்போது 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள், 11 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இப்போது கோவை வடக்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அருண்குமார் ஆதரவு தெரிவித்ததன் மூலம், ஓ.பி.எஸ். அணியில் இடம்பெற்றிருக்கும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையிலுள்ள ஓ.பி.எஸ். இல்லத்துக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை வந்த அவர், தனது ஆதரவை நேரில் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றபோது, அதைப் புறக்கணித்தவர் அருண்குமார். அப்போது அவர் கூறுகையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக வாக்களிக்க விருப்பமில்லை. மக்கள் விருப்பப்படி புறக்கணிக்கிறேன். கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் விருப்பப்படி நடந்துகொள்கிறேன். அதிமுக மாவட்ட செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எந்த நடவடிக்கையையும் சந்திக்க தயார். தொகுதி மக்களின் கருத்தைக் கேட்டு அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்வேன் எனக் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.