ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா ஏற்பு : ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா ஏற்பு : ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 07 , 2017,

சென்னை : முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ள ஆளுநர், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை பதவியில் தொடரும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சட்டப்பேரவை கட்சித் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார். சசிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, தற்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இது தொடர்பாக நேற்று முன்தினம் ஆளுநருக்கு அவர் எழுதிய கடிதத்தில், ‘என் தனிப்பட்ட காரணங்களுக்காக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறேன். எனது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டு, டிசம்பர் 6-ம் தேதி என்னால் நியமிக்கப்பட்ட அமைச்சரவையை விடுவிக்க வேண்டும்’ என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ராஜினாமாவை ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொண்டார். ஓ. பன்னீர் செல்வத்துக்கு அவர் நேற்று அனுப்பியுள்ள கடிதத்தில், ‘பிப்ரவரி 5-ம் தேதி அனுப்பிய தங்களது ராஜினாமா மற்றும் அமைச் சரவையின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன். அடுத்த மாற்று ஏற்பாடுகள் செய்யப் படும் வரை, நீங்களும் உங்கள் தலைமையிலான அமைச்சரவையும் செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்’ என கூறியுள்ளார்.