கத்தாரில் மரண தண்டனை பெற்ற மூன்று தமிழர்களை காப்பாற்ற,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 9.50 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

கத்தாரில் மரண தண்டனை பெற்ற மூன்று தமிழர்களை காப்பாற்ற,உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய 9.50 லட்சம் ரூபாய் வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

வியாழன் , ஜூலை 28,2016,

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த திரு. செல்லதுரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த திரு. சிவக்குமார் அரசன் ஆகியோர் மீது கத்தார் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கத்தார் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கத்தார் நாட்டில் பணி புரிந்து வந்த மூன்று தமிழர்கள் அங்கு ஒரு பெண்மணியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டனர். அதன் காரணமாக, 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அவர்கள் கத்தார் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திரு. அழகப்பா சுப்பிரமணி, விருதுநகரைச் சேர்ந்த திரு. செல்லத்துரை பெருமாள் மற்றும் சேலத்தைச் சேர்ந்த திரு. சிவக்குமார் அரசன் ஆகியோர் குற்றவாளிகள் என கத்தார் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டது. கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் உதவியுடன் தண்டனை அளிக்கப்பட்ட மூவரும் மேல் முறையீடு செய்ததன் அடிப்படையில் திருவாளர்கள் அழகப்பா சுப்பிரமணி, செல்லதுரை பெருமாள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தும், திரு. சிவக்குமார் அரசனுக்கு அளிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றியும் கத்தார் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி தெரிய வந்தவுடன், இந்திய தூதரக அதிகாரிகள் சிறையில் உள்ள மூன்று தமிழர்களை சந்திக்க வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்தனர். வழக்கறிஞர்கள், கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட வேண்டும் என்றும், அதற்கு சுமார் 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்த விவரங்களை கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகம் தமிழக அரசிற்கு தெரிவித்து மூன்று தமிழர்களின் மேல் முறையீட்டு வழக்குகளை கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் எடுத்துச் சென்று வழக்காடுவதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அனுப்பும்படி கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக, கத்தார் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள திரு.செல்லதுரை பெருமாள் என்பவரின் மனைவி திருமதி ராஜம்மாள் கத்தார் நாட்டில் சட்ட உதவிகளை பெறுவதற்கு தேவையான உதவிகளை அளிக்குமாறு முதலமைச்சர் ஜெயலலிதாவை நேற்று கேட்டுக் கொண்டுள்ளார்.

உலகில் எந்த ஒரு இடத்திலும் உள்ள தமிழர் துயரை துடைப்பதில் முன் நிற்கும் முதலமைச்சர்  ஜெயலலிதா, கத்தார் நீதிமன்றத்தால் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ள திருவாளர்கள் அழகப்பா சுப்பிரமணி, செல்லதுரை பெருமாள் மற்றும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ள திரு.சிவக்குமார் அரசன் ஆகியோர் கத்தார் நாட்டு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கு ஏதுவாக 9 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை உடனடியாக கத்தார் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பி வைத்திடவும், தண்டனை பெற்ற தமிழர்கள் உச்சநீதிமன்றத்தில் முறையாக மேல்முறையீடு செய்வதை உறுதி செய்யும்படியும், தமிழக அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.