கர்நாடக அரசு மேகதாது தடுப்பணையை கட்ட முயற்சித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் ; முதல்வர் ஜெயலலிதா உறுதி
வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 19, 2016,
சென்னை : காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்
தமிழக சட்டபேரவையில் 110 வது விதியின் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு.,
கர்நாடக அரசு மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றப் போவதாக கர்நாடகமாநில முதலமைச்சர் தனது சுதந்திர தின விழா உரையில் தெரிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை மிகுந்த கவலைக்குள்ளாக்கி உள்ளது. கர்நாடகம் மேகதாது அணை கட்டுவது தொடர்பாக கடந்த நம்முடைய சட்டமன்றத்தில் இரண்டு அரசினர் தனி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையில் குறிப்பிட்டுள்ள திட்டங்களுக்கு மாறாக மேகதாது அணை கட்டும் பணிகளையோ அல்லது வேறு எந்த புதிய திட்டங்களையோ கர்நாடக அரசு மேற்கொள்ளக் கூடாது எனவும்; காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் வரையிலும்; மற்றும் உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வரும் வரையிலும் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் ஆணை வழங்குமாறு உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றை தமிழ்நாடு அரசு 18.11.2014 அன்று தாக்கல் செய்துள்ளது.
கர்நாடக அரசு அதன் 18.11.2014 நாளிட்ட கடிதத்தில், ஏற்கெனவே நிலுவையில் உள்ள இடைக்கால மனுவில், உச்ச நீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மேகதாது திட்டத்தை நிறைவேற்றப் போவதில்லை என்று தெரிவித்துள்ளது.
8.3.2016 அன்று கர்நாடக அரசு தமிழகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உச்சநீதிமன்றத்திற்கு தெரிவிக்காமல் மேகதாதுவில், அணை கட்டுவது பற்றிய எண்ணம் ஏதும் இல்லை என்று கர்நாடக அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. இதையே உச்சநீதிமன்றத்திற்கும் கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு காவேரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மீறும் வகையிலும், தமிழ்நாடு அரசின் இசைவு பெறாமலும் எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்த உத்தேசிக்குமானால், தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட, சட்டபூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் எனது தலைமையிலான அரசு மேற்கொள்ளும். இவ்வாறு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.