குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : தனி வீடுகள் கட்ட ரூ. 2.10 லட்சம் மானியம்

குடிசை மாற்று வாரியம் மூலம் 23,476 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட அனுமதி அளித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவு : தனி வீடுகள் கட்ட ரூ. 2.10 லட்சம் மானியம்

வியாழன் , ஜூலை 14,2016,

சென்னை:குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் 23,476 அடுக்குமாடிக் குடியிருப்புகள்-தனி வீடுகள் கட்ட முதல்வர் ஜெயலலிதா அனுமதி அளித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்களின் கீழ், 59,023 அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகளை தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் கட்டியுள்ளது.

மேலும், 3,024 அடுக்குமாடிக் குடியிருப்புகள், 7,513 தனி வீடுகள் என 10,537 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டில், குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் 23,476 அடுக்குமாடிக் குடியிருப்புகள், தனி வீடுகள் கட்டுவதற்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி வழங்கியுள்ளார்.

இதில், சென்னை, தஞ்சாவூர், திருச்சி, ஈரோடு, கோவை, புதுக்கோட்டை, நாமக்கல், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் 7,204 அடுக்குமாடிக் குடியிருப்புகளும்,சென்னை, வேலூர், ஓசூர், ராணிப்பேட்டை, விருதுநகர், மதுரை, 157 பேரூராட்சிகளில் வசிக்கும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு அவர்களது சொந்த வீட்டு மனைகளில் 16,272 தனி வீடுகளும் கட்டப்படும்.

400 சதுர அடியில் அமையும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு பலநோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, பால்கனி, குளியலறை, கழிவறை ஆகியன இடம்பெற்றிருக்கும். 300 சதுர அடி தரையிலான தனி வீட்டில் பயனாளிகள் விருப்பப்படி கட்டிக் கொள்ளலாம் என்றாலும், தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதல்களோடு அரசு மானியமாக ரூ.2.10 லட்சம் வழங்கும்.