கூலி தொழிலாளி மகள் எம்.பி.பி.எஸ். படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

கூலி தொழிலாளி மகள் எம்.பி.பி.எஸ். படிக்க முதல்வர் ஜெயலலிதா நிதி உதவி

சனி, ஜூன் 25,2016,

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினியின் ஏழ்மை நிலையை அறிந்து, மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டுக் கட்டணமாக ரூ.1 லட்சத்து10 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.  இது குறித்து அ.தி.மு.க தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:-

சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மருத்துவக் கல்வி பயில்வதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்று, சென்னை, கே.கே.நகரில் உள்ள இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் படிப்பதற்கு இடம் கிடைத்துள்ள, திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தாலுக்கா, கண்ணக்குறுக்கை கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரியதர்ஷினி, தனது குடும்பம் ஏழ்மை நிலையில் வாழ்ந்து வருவதாகவும், தந்தை கூலி வேலை செய்து வருவதாகவும் தெரிவித்து, தனது மருத்துவப் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.தி.மு.க பொதுசெயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

எந்த ஒரு மாணவ, மாணவியும் கல்வி பயில்வதற்கு நிதி ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற தொலைநோக்கு சிந்தனையுடைய அ.தி.மு.க பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா பிரியதர்ஷினியின் வேண்டுகோளை தாயுள்ளத்தோடு பரிசீலித்து, அம்மாணவியின் மருத்துவப் படிப்புக்கான முழு செலவையும் ஏற்றுக்கொண்டு, முதலாம் ஆண்டு மருத்துவப்படிப்புக்கான கல்லூரிக் கட்டணம், விடுதிக் கட்டணம், புத்தகக் கட்டணம் உட்பட மொத்தம் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தை எம்.ஜி.ஆர். அறக்கட்டளை-யில் இருந்து வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அ.தி.முக தலைமைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.