கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை ப.சிதம்பரம் புலம்பல் : தி.மு.க. மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை ப.சிதம்பரம் புலம்பல் : தி.மு.க. மீது காங்கிரஸ் கடும் அதிருப்தி

திங்கள் , ஏப்ரல் 18,2016,

தி.மு.க. கூட்டணியில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. விரும்பிய தொகுதிகள் ஒதுக்கப்படாததால் தி.மு.க. மீது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். விரும்பாத தொகுதிகளாக ஒதுக்கிவிட்டார்கள். காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை என்று  ப.சிதம்பரம் புலம்பித் தீர்த்துள்ளார்.

தமிழக சட்டசபைத் தேர்தல் அடுத்த மாதம் 16ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு கூட்டணி அமைப்பது, வேட்பாளர்களை தேர்வு செய்வது போன்ற பணிகளை முடித்து விட்டு அரசியல் தலைவர்கள் பிரச்சார களத்தில் தீவிரமாக இறங்கிவிட்டார்கள். ஒருபக்கம் சுட்டெரிக்கும் வெயிலால் அனல் பறக்கிறது. மறுபக்கம் தலைவர்களின் பிரச்சாரத்தால் தமிழகம் முழுவதும் அனல் பறக்கிறது.

முன்னதாக கடந்த சட்டசபைத் தேர்தலில் காங்கிரசுக்கு 63 தொகுதிகளை தி.மு.க. ஒதுக்கி இருந்தது. அதே போல் இந்த முறையும் ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தி.மு.க.விடம் போராடிப் பார்த்தது. இதன் பொருட்டு டெல்லியில் இருந்து குலாம் நபி ஆசாத், முகுல் வாஸ்னிக் ஆகியோர் சென்னை வந்து தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள். ஆனால் காங்கிரஸின் கோரிக்கைக்கு கருணாநிதி செவி சாய்க்கவே இல்லை. காரணம் காங்கிரசில் இருந்து வாசன் தலைமையிலான அணி  பிரிந்து விட்டதால் காங்கிரஸ் கட்சி பலவீனமாகி விட்டது என்று நினைத்தாராம் கருணாநிதி. அதனால் தான் இந்த முறை 35 தொகுதிகளைத் தான் ஒதுக்க முடியும் என்று திட்டவட்டமாக அவர் கூறினாராம். இதனால் வெறுத்துப்போன காங்கிரஸ் தலைவர்கள் மீண்டும் கருணாநிதியிடம் மன்றாடினார்கள். இதையடுத்து சற்று இறங்கி வந்த தி.மு.க. காங்கிரசுக்கு 41 தொகுதிகளை ஒதுக்கியது.

இந்த 41 தொகுதிகளை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். ஆனாலும் கூட காங்கிரஸ் தரப்பில் இன்னமும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படவில்லை. அதிலும் ஏகப்பட்ட குளறுபடி என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் காங்கிரசுக்கு தி.மு.க. ஒதுக்கிய 41 தொகுதிகளைப்பற்றி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

தி.மு.க.விடம் இருந்து விரும்பிய தொகுதிகள் காங்கிரசுக்கு கிடைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அதிருப்தி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தின் புதிய கட்டிட திறப்பு விழா  நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சில தொகுதிகள் விரும்பிய தொகுதிகளாகவும், பல தொகுதிகள் விரும்பாத தொகுதிகளாகவும் உள்ளது. காங்கிரசுக்கு கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருப்பதால் தான் கேட்ட தொகுதிகள் கிடைக்கவில்லை. வேட்பாளர்கள் தேர்விலும் ஒரு சில வேட்பாளர்கள் நமக்கு பிடித்தவர்களாகவும், பிடிக்காதவர்களாகவும் இருக்கலாம்.

இவ்வாறு சிதம்பரம் பேசி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டிருப்பது கண்கூடாக தெரிகிறது. இதனிடையே தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனுக்கு எதிராகவும் அக்கட்சியைச் சேர்ந்த சிலர் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தனக்கு ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில் கடந்த ஒருவருடமாக அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வந்தார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி. இவர் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராவார். ஆனால், தமிழக சட்டசபைத் தேர்தலில் திமுகவுடன் கை கோர்த்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு அந்தத் தொகுதி கிடைக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த ஜோதிமணி, அரவக்குறிச்சி தொகுதியில் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். இந்த விவகாரம் காங்கிரஸில் உட்கட்சிப் பூசலை ஏற்படுத்தியது. ஜோதிமணி ராகுல் காந்தியின் அன்பையும், மதிப்பையும் பெற்றவர் என்பதால் இளங்கோவன் தரப்பால் ஜோதிமணிக்கு எதிராக எதுவும் பேச முடியவில்லை.

இந்நிலையில்,  இது குறித்து ஜோதிமணி செய்தியாளர்கள் மத்தியில் பேசுகையில், “அரவக்குறிச்சியில் திமுக – காங்கிரஸ் வெற்றி பெற பணி செய்ய மாட்டோம். இரண்டாம் கட்ட தலைவர்களை இளங்கோவன் நசுக்கப் பார்க்கிறார். கட்சிக்குள் இருந்துகொண்டே ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை எதிர்கொள்வேன்” என அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக அரவக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் தனது அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டத்தை கூட்டி, முக்கிய ஆலோசனையை ஜோதிமணி நடத்தியிருந்தார். அதன் பின்னரே இந்த முடிவை அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு குழப்பங்கள் நீடிக்கின்றன. தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியிலும் விரிசல் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாவதிலும் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டுள்ளது.