கொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

கொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகா குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 21, 2017,

சென்னை : நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி மு.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், எர்ணாவூர் கிராமம், சுனாமி குடியிருப்பு எண் -3ல் வசித்து வரும் பழனி என்பவரின் மகள் சிறுமி ரித்திகா என்பவரின் சடலம் 19.2.2017 அன்று திருவொற்றியூர் குப்பை மேட்டில் காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன்.

சிறுமி ரித்திகாவின் உயிரிழப்புக்கு காரணமான குற்றவாளியை உடனடியாக தேடிக்கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தரவும் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த சிறுமி ரித்திகா குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.