சட்டப்பேரவைத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அதிமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

சட்டப்பேரவைத் தேர்தலில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அதிமுக தொண்டர்களுக்கு  முதல்வர் ஜெயலலிதா அறிவுரை

திங்கள் , மார்ச் 28,2016,

அதிமுக சார்பில் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கொடுத்தவர்களிடம் 8வது நாளாக இன்றும் நேர்காணல் நடந்து வருகிறது. நேர்காணலின் போது சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க. வினர் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து முதல்வர் ஜெயலலிதா அறிவுரை வழங்கியுள்ளார். அதிமுக தொண்டர்களுக்கு அவர் வழங்கிய அறிவுரைகள் வருமாறு: –

தமிழக மக்களின் பேராதரவு பெற்று விளங்கும் ஆட்சியை நடத்தி வரும் எனது தலைமையிலான ‘அ.தி.மு.க.’ விரைவில் நடைபெற உள்ள சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். மேல்வகுப்பிற்குச் செல்ல ஆர்வத்துடன் இருக்கும் ஒரு நல்ல மாணவன் தேர்வை ஆவலுடன் எதிர்கொள் வதைப் போல கடந்த 5 ஆண்டுகளில் இந்திய மாநிலங்கள் பலவும் பின்பற்றத் துடிக்கும் அற்புதமான மக்கள் நலப் பணிகளை அதிமுக அரசு செய்திருப்பதால், சட்டப் பேரவைத் தேர்தலை அ.தி.மு.க. ஆவலோடு எதிர்கொள்ளக் காத்திருக்கிறது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வரலாற்றில் புதிய சாதனையாக அமைந்திடும் என்று நான் உறுதிபட நம்புகிறேன்.

தேர்தல் களத்தில் நீங்கள் ஆற்ற வேண்டிய பல்வேறு பணிகளைப் பற்றி உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் அவ்வப்போது உங்களுக்குத் தெரிவிப்பேன். என்னுடைய வழிகாட்டுதலில் அந்தப் பணிகளை நீங்கள் வெற்றிகரமாகக் கடமை உணர்வுடன் செய்து முடித்திட வேண்டும். ‘அ.தி.மு.க.’ என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்திற்கு உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் தலைமை ஏற்ற நாளில் இருந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க எண்ணற்ற வெற்றிகளை பெற்றுத் தந்திருக்கிறேன்.

கடந்த நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் நாடே திரும்பிப் பார்த்து வியப்படையும் மகத்தான வெற்றியைக் கழகம் பெற்றதைப் போலவும், இன்னும் ஒரு படி கூடுதலாக அதை விடவும் சிறப்பான வெற்றியைப் பெறும் வகையில் நான் திட்டமிட்டு உழைத்து வருகிறேன். என்னுடைய பாதையில் களப் பணியாற்றிட கட்சி தொண்டர்கள் ஒவ்வொருவரையும்  அன்புடன் அழைக்கிறேன். பூத் ஏஜெண்ட்டுகள் தங்கள் வாக்குச் சாவடிக்கு உட்பட்ட இடங்களில் வீடு வீடாகச் சென்று முறையாக ஆய்வு செய்து வாக்காளர் பட்டியலை சரிபார்த்திட வேண்டும்.

இருப்பிடம் மாறி சென்றிருக்கும் வாக்காளர்களுடைய பெயர்களும், இறந்துபோன வாக்காளர்களின் பெயர்களும் பட்டியலில் இடம்பெற்றிருந்தால் அதற்கான சான்றுகளோடு உரிய படிவத்தில் பூர்த்தி செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்க வேண்டும்.

18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இடம்பெறாமல் இருந்தால் உரிய படிவத்தில் அது குறித்த சான்றுகளோடு அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். புதிதாக வெளியிடப்பட்டிருக்கும் வாக்காளர் பட்டியலில் வேறு ஏதேனும் பிழைகள் அல்லது மாற்றங்கள் இருந்தாலோ, முகவரி மாற்றம் இருந்தாலோ அதற்குரிய படிவத்தில் பூர்த்தி செய்து அதிகாரிகளிடம் அளிக்க வேண்டும். கழக நிர்வாகிகள் அனைவரும் வாய்ப்பினை பயன்படுத்தி உரிய பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

என்னுடைய வாழ்வு மக்களுக்காக அர்ப்பணிக்கப் பட்ட தவ வாழ்வு. என்னுடைய வெற்றி கழகத்தின் வெற்றி. என்னுடைய உழைப்பு தமிழகம் உயர்ந்திடவே. வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச் சேரட்டும். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.