சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு காங்கிரஸ் தொழிற்சங்கம் ஆதரவு
வெள்ளி, ஏப்ரல் 29,2016,
நடைபெற உள்ள தமிழக சட்ட மன்றத் தேர்தலில், அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்கமான ஐஎன்டியுசி அறிவித்துள்ளது.
ஐஎன்டியுசி மாநில மூத்தத் துணைத் தலைவர் கே.எஸ்.கோவிந்தராஜன் மதுரையில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 7 லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட இயக்கமாக ஐஎன்டியுசி இருக்கிறது. புதிதாக தோன்றிய சிறு கட்சிகளுக்குகூட தேர்தலில் போட்டியிடுவதற்கு பெரிய கட்சிகள் வாய்ப்பு அளிக்கின்றன. ஆனால், 7 லட்சம் உறுப்பினர்கள் இருந்தும் ஐஎன்டியுசிக்கு காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வாய்ப்பு மறுத்து வருகிறது. ஐந்து ஆண்டுகால ஆட்சியில் அதிமுக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. சிறு மற்றும் குறு தொழில் துறையில் பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார்.