சபாநாயகர் தனபால் தராசு முள்ளைப் போல நடுநிலையுடன் செயல்படுவார் : முதல்வர் ஜெயலலிதா
சனி, ஜூன் 04,2016,
முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்த திரு. ப. தனபால் சபாநாயகராகவும், திரு. பொள்ளாச்சி வ. ஜெயராமன் துணை சபாநாயகராகவும் தமிழக சட்டமன்றப் பேரவையில் இன்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களைப் பாராட்டி உரையாற்றிய முதலமைச்சர் ஜெயலலிதா, நடுவு நிலைமையை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படவேண்டும் என்றும், எந்தப் பக்கமும் சாயாமல் தராசு முள்போல நடுநிலையோடு இருக்கவேண்டும் என்றும் வாழ்த்தினார்.
மேலும், பேரறிஞர் .அண்ணாவின் பெயரை கட்சியிலேயும், அண்ணாவின் உருவத்தை கொடியிலேயும் தாங்கிக்கொண்டுள்ள கட்சி அ.தி.மு.க. எனவே, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு ஏற்ப, எம்.ஜி.ஆர். வழியில் ஜனநாயக நெறிமுறைகளை கட்டிக்காக்க நாங்கள் முழு ஒத்துழைப்பு தருவோம். அதே சமயத்தில் எதிர்க்கட்சிகளும், தங்களுடைய கடமையையும், பொறுப்பினையும் உணர்ந்து, மக்களுக்குப் பயன்படக்கூடிய ஆக்கப்பூர்வமான கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.