சினிமா கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விரைவில் விருது வழங்கப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சினிமா கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விரைவில் விருது வழங்கப்படும் ; சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, ஆகஸ்ட் 13,2016,

சென்னை, தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்க பிரம்மாண்டமான விழா விரைவில் நடத்தப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் செய்தித்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் நேற்று  தி.மு.க உறுப்பினர் நடிகர் வாகை சந்திர சேகர் பங்கேற்று பேசினார். அப்போது கடந்த ஐந்தாண்டுகளாக திரைப்படத்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய விருதுகள் வழங்கப்படவில்லை என்று கூறினார்.

அதற்கு முதல்வர்  ஜெயலலிதா பதிலளித்து கூறியதாவது.,

உறுப்பினருக்கு தெரியுமோ, தெரியாதோ. முந்தைய தி.மு.க. ஆட்சியில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, மூன்று ஆண்டுகளுக்கு காவல் துறையினருக்கு பதக்கங்கள் வழங்குகின்ற விழா நடைபெறவேயில்லை. அதன் பின்னர் நான் ஆட்சிக்கு வந்த பிறகுதான், எல்லாவற்றிற்குமாகச் சேர்த்து ஒரு பெரிய விழாவை நடத்தினேன். அதைப்போலவே பல காரணங்களினால் திரைப்படக் கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் விருதுகள் வழங்க முடியவில்லை. எல்லாவற்றிற்கும் சேர்த்து ஒரு பிரமாண்டமான விழா நடத்தப்படும், விரைவில் அந்த விருதுகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.மேலும் சின்னத் திரை கலைஞர்களுக்கு முதன்முதலாக விருதுகள் அறிவிக்கப்பட்டது என்னுடைய ஆட்சிக் காலத்தில்தான் என்பதையும் அவருக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்தார்.