சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை ; முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

சின்னமலை – விமான நிலையம் இடையே மெட்ரோ ரயில் சேவை ; முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்

புதன், செப்டம்பர் 21,2016,

சென்னை ; சைதாப்பேட்டை சின்னமலை – விமான நிலையம்  இடையே மெட்ரோ யில் சேவையை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைக்கிறார்.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதில் கணிசமான ரெயில் தடம் பூமிக்கு அடியில் அமைக்கப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் இருந்து ஆலந்தூர் வரையிலான மெட்ரோ ரெயில் மேம்பாலம் பணிகள் முடிந்தன.

அங்கு கடந்த ஆண்டு முதல் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத் தொடர்ந்து சின்னமலை -– விமான நிலையம் மற்றும் செனாய் நகர் – கோயம்பேடு இடையிலான சுரங்கப் பாதைகளை நிறைவு செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதில் சின்னமலை -– விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பாதை பணி கடந்த ஜூலை மாதம் முடிவடைந்தது. அந்த பாதையில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து சின்னமலை -– விமான நிலையம் இடையே மெட்ரோ ரெயில்களை இயக்கலாம் என்று கடந்த மாதம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் எஸ்.நாயக் ஒப்புதல் வழங்கினார். 10 ஆயிரம் பக்கங்கள் கொண்ட பாதுகாப்பு அறிக்கையை ஆய்வு செய்து அவர் இந்த ஒப்புதலை வழங்கினார். இதையடுத்து சின்னமலை – விமான நிலையம் இடையே  இன்று  முதல் மெட்ரோ ரெயில் சேவை தொடங்குகிறது. இதற்கான விழா தலைமைச் செயலகத்திலும், விமான நிலைய மெட்ரோ ரெயில் நிலையத்திலும் இன்று  காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

தலைமைச் செயலகத்தில் இருந்தபடி முதல்வர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலம் சின்னமலை –- விமான நிலையம் இடையிலான மெட்ரோ ரெயில் பயணிகள் சேவையைத் தொடங்கி வைக்கிறார். அதோடு விமான நிலையம், மீனம்பாக்கம்,  நங்கநல்லூர் சாலை, கிண்டி, சின்னமலை மற்றும் பரங்கிமலையில் உள்ள 6 மெட்ரோ ரெயில் நிலையங்களையும் திறந்து வைக்கிறார். மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு, மத்திய சாலை போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் விழாவுக்கு முன்னிலை வகிப்பார்கள். விழாவில் தமிழக அரசின் தலைமை செயலாளர் ராமமோகனராவ், மத்திய நகர்ப்புற வளர்ச்சி அமைச்சக செயலாளர் ராஜீவ் கெளபா, தமிழக அரசின் முதன்மை செயலாளர் கிருஷ்ணன், சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ்குமார் பன்சல் உள்பட உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
மெட்ரோ ரெயில் சேவை விமான நிலையம் வரை நீட்டிக்கப்படுவதால் இனி கோயம்பேட்டில் இருந்து சென்னை விமான நிலையம் வரை பயணிகள் மிக குறைந்த நேரத்தில் பயணம் செய்ய முடியும்.

தற்போது கோயம்பேடு–ஆலந்தூர் இடையே தினமும் சராசரியாக 10 ஆயிரம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்து வருகிறார்கள். இனி 15 ஆயிரமாக உயரும். இன்று  ரெயில் சேவை தொடங்கும் சின்னமலை–விமான நிலையம் இடையிலான மொத்த தூரம் 8.6 கிலோ மீட்டராகும். இதில் 6 ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெட்ரோ ரெயிலுக்கான கட்டணம் முதல் 2 கி.மீ-க்கு ரூ. 10, 2 முதல் 4 கி.மீ-க்கு ரூ.20, 4 முதல் 6 கி.மீ.-க்கு ரூ.30, 6 முதல் 8 கி.மீ.-க்கு ரூ.40, 8 முதல் 10 கி.மீ.-க்கு ரூ.50, 10 முதல் 15 கி.மீ-க்கு ரூ.60 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.