சென்னையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுகள் ஒதுக்கீடு:5 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

சென்னையில் மழை வெள்ளத்தால் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுகள் ஒதுக்கீடு:5 குடும்பங்களுக்கு வீடு ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் ஜெயலலிதா

செவ்வாய், டிசம்பர் 29,2015,

சென்னையில் வீடுகளை இழந்தவர்களுக்கு 10,000 வீடுளை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதல்- அமைச்சர் ஜெயலலிதா  இன்று தலைமைச் செயலகத்தில், சென்னையில் அண்மையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் வீடுகளை இழந்த அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளில் வசித்த குடும்பங்களுக்கு தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம்  முதற்கட்டமாக சென்னை, ஒக்கியம் துரைப்பாக்கம் மற்றும் பெரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை ஒதுக்கீடு செய்யும் அடையாளமாக 5 குடும்பங்களுக்கு ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்

இதுவரை கண்டிராத அளவிற்கு பெய்த கனமழையின் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை மாநகரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதில் அதிகமான அளவு ஏழை மக்களின் வீடுகள் பாதிப்பு அடைந்தன. வெள்ளத்தால் வீடு இழந்த அனைவருக்கும் வீடு வழங்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கிலும், மழைநீர் முறையாக செல்ல வழிவகை ஏற்படுத்தும் பொருட்டும், அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய கரையோரங்கள் ஆகியவற்றில் குடிசைகளில் வசித்த மக்களுக்கு குடிசைகளுக்கு மாற்றாக நிரந்தர வீடுகள் வழங்கிடவும், தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் புதிதாக 50,000 வீடுகளும், அனைவருக்கும் வீடு திட்டத்தின் மூலம்  50,000 வீடுகளும் கட்டித்தரப்படும் என்று  முதல் அமைச்சர் அறிவித்தார்

தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் முதற்கட்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 10,000 அடுக்குமாடி குடியிருப்புகளை அடையாறு கரையோரங்களில் குடிசை வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யும் அடையாளமாக  5 குடும்பங்களுக்கு முதல் அமைச்சர் ஜெயலலிதா  இன்று ஒதுக்கீட்டு ஆணையினை வழங்கினார்.

இந்த குடியிருப்புகள் ஒவ்வொன்றும் பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையலறை, குளியலறை மற்றும் கழிவறை, குடிநீர் வசதி, மின்சார வசதி, மின்விசிறி ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீரகற்று வசதிகள், சாலைகள், மழைநீர் வடிகால் வசதி, குப்பைத் தொட்டிகள், தெரு மின்விளக்குகள், கான்கீரிட் நடைபாதை, ஆரம்ப, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள், நியாயவிலைக் கடைகள், பாலர் பள்ளிகள், ஆரம்ப சுகாதார நிலையம், மருத்துவமனை, பேருந்து வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இக்குடும்பங்கள் மறுகுடியமர்வு செய்யப்படும் போது அவர்கள் தங்களது உடைமைகளை தற்போதுள்ள இடத்திலிருந்து மறு குடியமர்வு பகுதிக்கு  கொண்டு செல்ல 5000 ரூபாய் இடமாற்றப் படியாகவும், மாதம் 2500 ரூபாய் வீதம், ஓராண்டிற்கு 30 ஆயிரம் ரூபாய் பிழைப்புப் படியாகவும் வழங்கப்படும். மறுகுடியமர்வு செய்யும் முதல் மூன்று தினங்களுக்கு உணவு மற்றும் குடிநீரும் அக்குடும்பங்களுக்கு வழங்கப்படும். இக்குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சிகள் அளிக்கப்படுவதோடு, வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வேலை வாய்ப்பு பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தக் குடியிருப்புகளில் குடியேறும் குடும்பங்களுக்கு உடனடியாக குடும்ப அட்டைகள் முகவரி மாற்றம் செய்து தரப்படுவதோடு,  அனைத்து மாணவ மாணவியரும் இக்குடியிருப்பு பகுதிகளில் உள்ள பள்ளிகளில் உடனடியாக  சேர்த்துக் கொள்ளப்படுவர். மேலும், இக்குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு போதிய மருத்துவ வசதிகள் செய்து தரப்படும்.என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தங்கள் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டனர்.