சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சியாக மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சென்னை மாநகராட்சி, பெருநகர சென்னை மாநகராட்சியாக மாற்றம்: முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

சனிக்கிழமை, ஜனவரி 30, 2016,

காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி என முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று தலைமை செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஜெயலலிதா, விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி என அறிவித்து காணொலிக் காட்சி மூலமாகத் தொடக்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியானது 10 மண்டலங்கள், 155 வார்டுகளுடன் 174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வந்தது. பின்னர் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகள் சென்னை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டு, அதன் பரப்பளவினை 174 சதுர கிலோ மீட்டரிலிருந்து 426 சதுர கிலோ மீட்டராக விரிவாக்கம் செய்ததைத் தொடர்ந்து, சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி எனப் பெயர் மாற்றம் செய்து 26.10.2015 அன்று அரசாணை வெளியிடப்பட்டது.

அதன் அடிப்படையில், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 42 உள்ளாட்சி அமைப்புகளை இணைத்து விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாநகராட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி எனத் அறிவித்து முதலமைச்சர் ஜெயலலிதா காணொலிக் காட்சி மூலமாக துவக்கி வைத்தார்.

அதேபோல், மொத்தம் 36 கோடியே 26 லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சியின் சார்பில் கட்டப்பட்டுள்ள அம்மா உணவகங்கள், உயர்மட்ட பாலம், பூங்காக்கள், சமுதாயக் கூடங்கள், பேருந்து நிலையம், அலுவலகக் கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.