செல்போன் வெடித்து கண்பார்வை இழந்த சிறுவனுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மீண்டும் பார்வை:சிறுவனின் பெற்றோர் முதலமைச்சருக்கு நன்றி

செல்போன் வெடித்து கண்பார்வை இழந்த சிறுவனுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மீண்டும் பார்வை:சிறுவனின் பெற்றோர் முதலமைச்சருக்கு நன்றி

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

கைப்பேசி வெடித்ததால் கண் பார்வை பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. கண் பார்வை குறைபாடை ஒரே நாளில் சரிசெய்ய, உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு, சிறுவனின் பெற்றோர் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் கீழ்வாசல் பகுதியைச் சேர்ந்த எட்டியப்பன்-வெண்ணிலா தம்பதியரின் மகன் 9 வயது சிறுவன் தனுஷ். கடந்த 29ம் தேதி இரவு, மின் இணைப்புடன் கூடிய செல்போனை உபயோகித்துக் கொண்டிருந்தபோது அது வெடித்துச் சிதறியது. இதனால் சிறுவன் தனுஷின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. உடனடியாக சிறுவனுக்கு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்ட தனுஷுக்கு, கையில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, உடனடியாக தீவிர சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். பரிசோதனையில், சிறுவனின் வலது கண்ணில் கருவிழி காயமடைந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அச்சிறுவனுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர்கள், கண் சேமிப்பு வங்கியில் இருந்த கண் தானம் மூலம்பெறப்பட்ட கருவிழியினை அறுவை சிகிச்சை மூலம் பொருத்தினர்.

வலது கண் இமையில் ஏற்பட்ட காயமும் அறுவை சிகிச்சையின்போது சரி செய்யப்பட்டதால் வலது கண் பார்வை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும், இடது கண்ணில் கிழிந்திருந்த வெண் படலமும் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டது. வலது கண்ணில் புறை நீங்கியபின் பார்வையில் முன்னேற்றம் ஏற்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் லட்சக்கணக்கில் செலவாகும் இந்த அறுவை சிகிச்சையை, எவ்வித கட்டணமும் இன்றி முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் வெற்றிகரமாக செய்து முடித்து, சிறுவனின் இழந்த பார்வையை மீட்டுத்தந்த முதலமைச்சருக்கு சிறுவனின் பெற்றோர்கள், நெஞ்சம் நெகிழ நன்றி தெரிவித்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப்படி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக அளிக்கப்பட்டு, கண்பார்வை பெற்றுள்ள சிறுவன் தனுஷினை, அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மருத்துவத்துறை அதிகாரிகள் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். மேலும், தனுஷின் தாய் மற்றும் அவரது குடும்பத்தினரிடம், சிகிச்சை விவரங்களை கேட்டறிந்தனர்.

ஏழை-எளிய குடும்பங்களுக்கு உயிர்காக்கும் மருத்துவ சேவைகள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் அளிக்கப்பட்டு வருகின்றன. சிறுவன் தனுஷுக்கு மீண்டும் கிடைத்துள்ள கண் பார்வை இதற்கு ஓர் எடுத்துக்காட்டாகும்.