ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் ; சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் ; சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றம்

திங்கட்கிழமை, ஜனவரி 23,2017,

சென்னை : தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கான சட்ட மசோதாவை தாக்கல் செய்ய, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் இன்று மாலை 5 மணியளவில் சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் கூடியது.

இந்த கூட்டத்தில், முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சட்ட முன்வடிவை தாக்கல் செய்தார். சட்ட முன்வடிவை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் முன்மொழிய, சபாநாயகர் தனபால், ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார். இதையடுத்து, சட்டப்பேரவையில் இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டதை அடுத்து, ஜல்லிக்கட்டு நடத்த இருந்த தடை முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இந்த அவசரச் சட்டம் மூலம் விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தில் மாநில அளவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சட்ட முன் வடிவு, சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் நிகழ்வை, ஓய்வு பெற்ற நீதிபதி ஹரி பரந்தாமன், இயக்குநர் கௌதமன், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கார்த்திகேய சிவசேனாதிபதி, ராஜேஷ், ராஜேசேகரன், ஆதி, அம்பலத்தரசு உள்ளிட்டோரும் சட்டப்பேரவைக்கு நேரில் வந்து பார்வையாளர்களாக பார்வையிட்டனர்.

தமிழர்தம் பாரம்பரிய பண்பாட்டுப் பெருமைக்கு அடையாளமாகத் திகழும் ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தில், ஜல்லிக்கட்டு சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதற்கு, பொதுமக்கள் நன்றியும்-பாராட்டும் தெரிவித்துள்ளனர்.