ஜல்லிக்கட்டு நடத்த உடனே அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடத்த உடனே அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் – முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு வலியுறுத்தல்

செவ்வாய், ஜனவரி 12,2016,

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உடனடியாக அவசர சட்டம் பிறப்பிக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றங்கள் துறை அமைச்சகம், கடந்த 7-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையில், பொங்கல் விழாவையொட்டி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டியை நடத்த வழிவகை செய்தது – இந்த அறிவிக்கை தமிழக அரசுக்கு கிடைத்தவுடன், அறிவிக்கையில் கண்டுள்ள நிபந்தனைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, ஜல்லிக்கட்டு நடத்த ஏற்பாடுகளை செய்யுமாறு மாவட்ட ஆட்சியர்களுக்கு விரிவான சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன- அதன் அடிப்படையில், தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு நடத்த விழா குழுவினர் அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

இந்நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம், கடந்த 7-ம் தேதிவெளியிட்ட சுற்றறிக்கைக்கு உச்சநீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. எனவே, இந்த சுற்றறிக்கையின்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த இயலாது – பொங்கல் விழாக்கள், வரும் 14-ம் தேதி முதல் தொடங்கவிருப்பதால், தமிழகத்தின் கிராமப்பகுதிகளில் வாழும் மக்கள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்து, தமிழகத்தின் வளம் மிக்க கலாச்சாரத்தில் பிணைந்துள்ள ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெறும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்தனர் – ஜல்லிக்கட்டு என்ற பாரம்பரிய நிகழ்ச்சியில், ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது மிகவும் முக்கியமானதாகும்.

எனவே, இப்பிரச்னையின் அவசரம் கருதி, மத்திய அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த ஏதுவாக, அவசர சட்டம் ஒன்றை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்வதாக முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக மக்களின் சார்பில், பிரதமர் இப்பிரச்னையில் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், முதலமைச்சர் ஜெயலலிதா தமது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.