ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ; முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்து

ஜெயா தொலைக்காட்சியின் 18-ம் ஆண்டு தொடக்க விழா ;  முதலமைச்சர் ஜெயலலிதா நல்வாழ்த்து

திங்கள் , ஆகஸ்ட் 22,2016,

ஜெயா தொலைக்காட்சியின் 18-வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முதலமைச்சர் ஜெயலலிதா தமது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜெயா தொலைக்காட்சி, உண்மையை உள்ளவாறு எடுத்துரைக்கும் தொலைக்காட்சி ஊடகம் என்பது பெருமைக்குரியது என முதலமைச்சர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ஜெயா தொலைக்காட்சி 17 ஆண்டுகளாக சிறப்புற பணியாற்றி, இன்று 18-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது என்று தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி சேவை என்பது கடும் போட்டிகள் நிறைந்த துறை ஆகும் – இதில், 18ம் ஆண்டில் வெற்றிகரமாக அடி எடுத்து வைப்பது என்பது மிகுந்த பாராட்டுக்குரியதாகும் என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பல தொலைக்காட்சி ஊடகங்கள் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு வரும் நிலையில், உண்மையை உள்ளவாறு எடுத்துரைக்கும் ஒருசில தொலைக்காட்சி ஊடகங்களில் ஜெயா தொலைக்காட்சி ஒன்று என்பது பெருமைக்குரியது ஆகும் – செய்திகள் மட்டுமல்லாமல், வணிகம், விவசாயம் மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகள் பற்றியும் ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது – இவையன்றி, பொழுதுபோக்கு அம்சங்கள், திரைப்படங்கள், திரைத்துளிகள் மற்றும் சின்னத்திரை தொடர்களையும் ஜெயா தொலைக்காட்சி ஒளிபரப்பி வருகிறது என முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

மக்களின் அறிவுசார் வளர்ச்சிக்கான நிகழ்ச்சிகளை அளிப்பதோடு, பொழுதுபோக்கு அம்சங்களையும் ஜெயா தொலைக்காட்சி வழங்கி வருகிறது – மக்கள் சேவையில் இன்னும் பல்லாண்டு, பல பல ஆண்டு தொடர்ந்து வெற்றிகரமாக பயணிக்க ஜெயா தொலைக்காட்சிக்கு தமது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.