தமிழகத்தில், கனமழை காரணமாக பொதுவிநியோக குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில், கனமழை காரணமாக பொதுவிநியோக குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை உடனடியாக வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு

தமிழகத்தில், கனமழை காரணமாக பொதுவிநியோக குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு, உடனடியாக நகல் அட்டைகளை வழங்க முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணாக்கர் அனைவருக்கும் விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை வழங்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கு முன்னரே அனைத்துத் துறை அதிகாரிகளும் தமது ஆணையின் பேரில் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஓரிரண்டு தினங்களிலேயே மழை, மிக அதிகளவு கொட்டித் தீர்த்துவிட்டதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் மழையால் பாதிப்புகள் ஏற்பட்டன – பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் போர்க்கால அடிப்படையில் மழை நீரை வெளியேற்றி, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை அமைச்சர்களின் மேற்பார்வையில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வடகிழக்கு பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவித் தொகை வழங்கவும் மற்றும் உடனடி சீரமைப்புப் பணிகளுக்கும் என 500 கோடி ரூபாய் ஒதுக்கி தாம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்சேதங்களை ஆய்வு செய்து கணக்கெடுப்புக்குப் பின் இந்த ஆய்வின் அடிப்படையில் பயிர் சேதங்களுக்கான இழப்பீடுகள் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு வழங்கப்படும் என்று தமது நேற்றைய அறிக்கையில் தெரிவித்திருந்ததாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மழையால் பாதிக்கப்பட்ட குடிசைகள் மற்றும் வீடுகள் கணக்கெடுக்கும் பணி மற்றும் கால்நடை இழப்பு, படகுகள் இழப்பு ஆகியவையும் கணக்கிடப்பட்டு இந்த இழப்புகளுக்கான நிவாரணத் தொகையை விரைந்து வழங்கிட தாம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதையும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தமது அறிக்கையில் தெரிவித்திருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் பெய்த கன மழையால் சில பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்த காரணத்தால், மாணாக்கர்களின் பாடப் புத்தகங்கள் சேதமடைந்துவிட்டதாக தெரிய வந்துள்ளது – மாணாக்கர்களின் கல்விக்கு தமது அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது – எனவே, மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட மாணாக்கர்கள் அனைவருக்கும் விலையில்லா பாடப் புத்தகங்கள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் வழங்க உத்தரவிட்டுள்ளதோடு, சீருடை ஒன்றும் வழங்கிட தாம் உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

இந்த கன மழை வெள்ளம் காரணமாக பலர் தங்களது பொது விநியோக குடும்ப அட்டைகளை இழந்து விட்டதாக தாம் அறிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, அவ்வாறு குடும்ப அட்டைகளை இழந்தவர்களுக்கு நகல் அட்டைகளை, அதாவது Duplicate அட்டைகளை உடனடியாக வழங்கவும் தாம் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.