தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலம் ஆக்குவேன் – 11,967 பேர், அ.தி.மு.க.வில் இணைந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா உரை

தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலம் ஆக்குவேன் – 11,967 பேர், அ.தி.மு.க.வில் இணைந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா உரை

புதன், ஜூன் 29,2016,

சென்னை:சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே எனது லட்சியம் என்றும், தமிழகத்தை நாட்டிலேயே முதன்மை மாநிலம் ஆக்குவேன் என்றும் மாற்று கட்சியினர், அ.தி.மு.க.வில் இணைந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார். உண்மையான ஜனநாயகம் நிலவுகின்ற ஒரே இயக்கம் அ.தி.மு.க என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமைக்கழக அலுவலகம் அருகே மாற்றுக்கட்சிகளில் இருந்து அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க பொதுசெயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா பங்கேற்று பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்த 11 ஆயிரத்து 967 பேருக்கு அ.தி.மு.க  உறுப்பினர் உரிமைச் சீட்டுகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர்களை வரவேற்று முதல்வர் ஜெயலலிதா  பேசியதாவது:-

தி.மு.க, காங்கிரஸ், ம.தி.மு.க மற்றும் த.மா.கா. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலும், இன்னபிற அமைப்புகளிலும் இதுநாள் வரை பணியாற்றி வந்த 11,967 பேர் இன்று என் முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளீர்கள். அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் உங்கள் அனைவரையும் வருக! வருக! என அன்புடன் வரவேற்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உண்மையான ஜனநாயகம் நிலவுகின்ற ஓர் அரசியல் இயக்கமாகும். நீங்கள் வந்துள்ள இடம் நல்ல இடம். எத்தகைய நம்பிக்கையுடன் இந்த கழகத்தில்இணைய வந்துள்ளீர்களோ, அந்த நம்பிக்கை ஒரு போதும் வீண் போகாது, என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் லட்சியம், எல்லோரும்எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், வளமான தமிழகத்தைப் படைத்து, எல்லோரும் பயன்பெற வேண்டும், சிறந்த ஆட்சியை வழங்க வேண்டும் என்பதே ஆகும். இதனை நன்கு உணர்ந்து தான், நீங்கள் அனைவரும் இன்று என்னுடைய தலைமையில் கழகப் பணியாற்ற வந்திருக்கிறீர்கள்.

இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக, தமிழகத்தை உருவாக்கிட, அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் எனக்கு, நீங்கள் அனைவரும் உறுதுணையாக இருப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகிறேன். அ.தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது.   இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.