தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது : கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

தமிழக மக்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு அம்மா உயிர் பிரிந்தது : கண்ணீரில் மிதக்கிறது தமிழகம்

செவ்வாய், டிசம்பர் 06,2016,

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் நேற்று இரவு 11.30 மணிக்கு பிரிந்தது. அவருக்கு வயது 68.முதல்வர் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்த தகவல், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, ஒட்டுமொத்தமே தமிழகமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

முதல்வரின் மரணச் செய்தியால் தமிழக மக்களும், அவரது கட்சித் தொண்டர்களும் கண்ணீர் கடலில் மூழ்கினர். அ.தி.மு.க. தொண்டர்கள் அப்பல்லோ மருத்துவமனை முன்பு கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. முதல்வர் ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் பார்வைக்கு வைக்கப்படுகிறது. முதல்வரின் மரணத்தை அடுத்து தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா, உடல் நலக்குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ம் தேதி இரவு 10 மணிக்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர்.

முதலில் முதல்வர் சில நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. அக்டோபர் 1-ம் தேதி தமிழக ஆளுநர் (பொறுப்பு) சி.எச்.வித்யாசாகர் ராவ் அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து விசாரித்துச் சென்றார். அப்போது, முதல்வர் ஜெயலலிதாவுக்கு நுரையீரல் தொற்று இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல் வெளியிடப்பட்டது.

நுரையீரல் தொற்றை நீக்க லண்டன் மருத்துவர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவர் முதல்வருக்கு நுரையீரல் தொற்றை நீக்குவதற்கான சிகிச்சை அளித்தார். இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சேர்ந்த நுரையீரல் நிபுணர் ஜி.கில்நானி, மயக்கவியல் நிபுணர் அஞ்சன் டிரிக்கா, இதய சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக் ஆகியோர் சென்னை வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.

எய்ம்ஸ் மருத்துவர்கள், அமெரிக்க மருத்துவர் ரிச்சர்டு பீலே ஆகியோர் அவ்வப்போது வந்து முதல்வருக்கு சிகிச்சை அளித்துச் சென்றனர். அவர்களது ஆலோசனையின்படி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் குழு, முதல்வருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தது.

தொடர் சிகிச்சை காரணமாக நுரையீரல் தொற்று குறைந்து, முதல்வரின் உடல்நிலை சீராகி வருவதாகவும், எனினும் அவர் மருத்துவமனையில் நீண்ட நாள் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் அக்டோபர் 6-ம் தேதி அப்போலோ நிர்வாகம் அறிவித்தது. அக்டோபர் 7-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி மருத்துவமனைக்கு வந்து முதல்வர் உடல்நிலை குறித்து அமைச்சர்கள், மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அக்டோபர் 7 -ம் தேதி, தமிழக தலைமைச் செயலர் பி.ராமமோகன ராவ், நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைத்துப் பேசினார். அக்டோபர் 8-ம் தேதி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், 10-ம் தேதி கேரள ஆளுநர் சதாசிவம், முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து விசாரித்து சென்றனர்.

இந்நிலையில், அக்டோபர் 11-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா கவனித்துவந்த உள்துறை உள்ளிட்ட இலாகாக்களை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் ஒப்படைத்து ஆளுநர் வித்யாசாகர் ராவ் உத்தரவிட்டார். முதல்வர் ஜெயலலிதா முதல்வராகவே தொடர்வார் என்றும் அறிவித்தார். அதைத் தொடர்ந்து, அக்டோபர் 12-ம் தேதி பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, அக்டோபர் 13-ம் தேதி திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள் ஆகியோர் அப்போலோ மருத்துவமனை சென்று முதல்வர் உடல்நலம் தொடர்பாக விசாரித்தார்.

அக்டோபர் 22-ம் தேதி ஆளுநர் 2-வது முறையாக அப்போலோ மருத்துவமனைக்கு வந்து முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவமனை தலைவர் பிரதாப் சி.ரெட்டி மற்றும் மருத்துவ குழுவினரிடம் விசாரித்தறிந்தார். இதற்கிடையே முதல்வர் பூரண நலம் பெற வேண்டி அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகள், கட்சியினர் தமிழகம் முழுவதும் கோயில்களில் யாகம், பூஜைகள் நடத்தினர். இதையடுத்து முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாசம், கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறிது சிறிதாக நீக்கப்பட்டு, இயற்கையாக சுவாசிக்கும் நிலைக்கு வந்தார். அவருக்கு சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருந்து வந்த மேரி, சீமா ஆகியோர் பிசியோதெரபி சிகிச்சை அளித்தனர்.

சில தினங்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண பிரிவுக்கு முதல்வரை மாற்றினர். அப்போது, அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறும்போது, “முதல்வர் வேகமாக குணமடைந்து வருகிறார். அவர் விரும்பும்போது வீட்டுக்குச் செல்லலாம்” என்றார்.

மாரடைப்பு

முதல்வர் எப்போது வீட்டுக்குச் செல்வார், எப்போது மீண்டும் பணிக்கு வருவார் என கட்சியினரும் தமிழக மக்களும் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவரை தீவிர சிகிச்சை பிரிவுக்கு மருத்துவர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த தகவல் வெளியானதும் மருத்துவமனையில் அதிமுக தொண்டர்கள் குவிந்தனர். அமைச்சர்கள், அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

முதல்வர் உடல்நிலை தொடர்பான செய்திகளால் பதற்றம் நிலவியதால், அப்போலோ மருத்துவமனை நிர்வாகம், அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு இதய நோய், நுரையீரல் மற்றும் அவசர சிகிச்சை நிபுணர்கள் சிகிச்சை அளித்து, தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்’ என தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், முதல்வர் உடல்நிலை குறித்து ஆளுநர் வித்யாசாகர் ராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் இருந்து அவர் நேற்று முன்தினம் இரவு 11.27 மணிக்கு சென்னை வந்தார். ராஜ்பவனில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திவிட்டு நள்ளிரவு 12 மணிக்கு அப்போலோ மருத்துவமனை வந்தார். முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை, அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சை ஆகியவற்றை அறிந்துகொண்டு, மீண்டும் ராஜ்பவன் திரும்பினார்.

இந்நிலையில், திங்கட்கிழமை அதிகாலை 3 மணிக்கு இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பை நீக்க முதல்வருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியானதும், அதிமுக பிரமுகர்கள், வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிகளவில் தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்தனர். பகல் 12.30 மணிக்கு மீண்டும் ஒரு அறிக்கையை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், ‘முதல்வருக்கு மருத்துவ நிபுணர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு எக்மோ (ECMO) என்ற கருவி மூலம், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது’ என தெரிவித்தது.

முதல்வர் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும், அதிமுகவினர் அதிர்ச்சியில் உறைந்தனர். மருத்துவமனை வளாகமே பரபரப்பானது. பதற்றத்தை தணிக்க போலீஸார் குவிக்கப்பட்டனர். அமைச்சர்கள், அரசு செயலர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் என பலரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

இந்நிலையில், தீவிர அளித்தும் பயனின்றி முதல்வரின் உயிர் 11.30 மணிக்கு பிரிந்ததாக நள்ளிரவில் அறிவிக்கப்பட்டது.

இதைக் கேட்டதும் மருத்துவமனை முன்பு திரண்டிருந்த அதிமுகவினர் ‘அம்மா’ என்று கதறித் துடித்தனர். பெண்கள் மார்பில் அடித்துக்கொண்டு அழுதனர்.

இன்று நல்லடக்கம்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இறுதி சடங்குகள் நடக்கின்றன. அதன்பிறகு, அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது. பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படுகிறது. சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

7 நாள் துக்கம்

முதல்வரின் மரணச் செய்தி வெளியானதும், அ.தி.மு.க கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டன. முதல்வரின் மறைவையடுத்து 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல், புதுச்சேரியில் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, நேற்று இரவு கிரீம்ஸ் சாலையில் இருந்து போயஸ் தோட்டம் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் முதல்வரின் உடல் அவரது இல்லத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது.

கண்ணீர் கடலில் மக்கள்

முதல்வரின் மறைவையடுத்து எய்ம்ஸ் மருத்துவர்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். அரசு செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளும் அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து புறப்பட்டு சென்றனர். முதல்வரின் மரணச் செய்தியை அறிந்ததும் தொண்டர்களும், பொதுமக்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். தமிழகமே கண்ணீர் கடலில் மூழ்கியது. முன்னதாக நேற்று மாலையே தமிழகம் முழுவதும் கடைகள், நிறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு தமிழகம் வெறிச்சோடியது. சுருக்கமாக சொன்னால் தமிழகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.