தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம்

திங்கள் , பெப்ரவரி 01,2016,

இலங்கை சிறைகளில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் மீண்டும் மீண்டும் கைது செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

2015-ம் ஆண்டு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜெகதாபட்டினம் மற்றும் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

அவர்களையும் ஏற்கனவே சிறையிலுள்ள 4 மீனவர்களையும், 69 படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண ஆழ்கடல் மீன்பிடி கட்டமைப்புகளுக்கு சிறப்பு நிதியாக, 1,520 கோடி ரூபாய் ஒதுக்குமாறு, தாம் ஏற்கனவே கோரியிருப்பதையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

தமிழக மீனவர் பிரச்னைக்கு கச்சத் தீவை மீட்பதே நிரந்தர தீர்வாக அமையும் என்றும் ஜெயலலிதா தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.