தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாணவ-மாணவிகள் அஞ்சலி

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாணவ-மாணவிகள் அஞ்சலி

சனி, டிசம்பர் 10,2016,

சென்னை ; மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ-மாணவிகள் பிரார்த்தனை நேரத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 5-ந்தேதி மரணம் அடைந்தார். இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. விடுமுறை முடிந்து நேற்று காலை பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளிகள் திறக்கப்பட்டதும் காலையில் பிரார்த்தனை நேரத்தில் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.
அப்போது ஜெயலலிதாவின் உருவப்படம் மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
பல பள்ளிகளில் மாணவ- மாணவிகள், ஆசிரியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு , அரசு உதவி பெறும், சுயநிதி பள்ளிகள் அனைத்திலும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மொத்தம் 57 ஆயிரத்து 583 பள்ளிகளில் 5 லட்சம் ஆசிரியர்களும், 1 கோடியே 33 லட்சம் மாணவ-மாணவிகளும் அஞ்சலி செலுத்தினார்கள்.