தினகரனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பதவியில் நீடிக்க முடியாது : புகழேந்தி பேட்டி

தினகரனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பதவியில் நீடிக்க முடியாது : புகழேந்தி பேட்டி

ஜூன் 19, 2017,திங்கள் கிழமை, 

மதுரை : டி.டி.வி.தினகரனுக்கு எதிராக யார் செயல்பட்டாலும் பதவியில் நீடிக்க முடியாது என்று கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி கூறினார்.

கர்நாடக மாநில அ.தி.மு.க. (அம்மா அணி) செயலாளர் வ.புகழேந்தி மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

கழக துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் சிறை சென்றபோது தமிழகம் முழுவதும் அவருக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டன.

அதற்கு ஒருங்கிணைப் பாளர்களாக மதுரையை சேர்ந்த நிர்வாகிகள் செயல்பட்டனர். அவர்களை இன்று சந்தித்தேன். அப்போது அவர்கள் சில கோரிக்கைகளை முன்வைத்தனர்.

வரலாற்று சிறப்புமிக்க மதுரை மண்ணில்தான் புரட்சித்தலைவர் எம்.ஜி. ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்கினார். அதன் நினைவாக எம்.ஜி. ஆருக்கு ஜெயலலிதா செங்கோல் வழங்குவது போல் வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கை விரைவில் நிறைவேற்றப்படும்.முதலமைச்சர், அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவருடைய ஒத்துழைப்புடன் இந்த சிலை மதுரையில் அமைக்கப்படும். டி.டி.வி.தினகரன் சிலையை திறந்து வைப்பார்.

தினகரன் அரசியல் பணியில் ஈடுபடுவதற்கு அமைச்சர்கள் தடை விதித்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி நம்பத்தகுந்தது அல்ல. முதலமைச்சராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் டி.டி.வி.தினகரனுக்கு எதிராக செயல்பட்டால் அவர்கள் பதவியில் நீடிக்க முடியாது. இது நிச்சயம்.இவ்வாறு புகழேந்தி கூறினார்.