திமுக, காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவும்:கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கருத்து

திமுக, காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் படு தோல்வியைத் தழுவும்:கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி கருத்து

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு கொள்கை கிடையாது. இந்தக் கட்சிகள் இணைந்து அமைத்துள்ள கூட்டணி சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறாது, தோல்வியைத் தழுவும் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.அழகிரி கூறியுள்ளார்.

இதுகுறித்து மு.க.அழகிரி அளித்துள்ள பேட்டியில்,

காங்கிரஸுடன் இனி கூட்டணி அமைக்க மாட்டோம் என்றுதான் அந்தக் கூட்டணியிலிருந்து திமுக விலகியது. பிறகு, கனிமொழி, மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும் என்று காங்கிரஸிடம் வாக்கு கேட்டுச் சென்றனர். மாநிலங்களவை உறுப்பினராகவும் கனிமொழி உள்ளார். காங்கிரஸ் கட்சியை எந்தக் கூட்டணியிலும் சேர்க்க மாட்டார்கள். அதனால் எந்தக் கொள்கையும் இல்லாமல் திமுக கூட்டணிக்கு அவர்கள் திரும்பி வந்துள்ளனர். 2ஜி அலைக்கற்றை ஊழலில் மன்மோகன் சிங்குக்கும் பங்கு உண்டு என்று ஆ.ராசா அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக 10 நாள்களுக்கு முன்பு நீதிமன்றத்தில் மன்மோகன் சிங்குக்கும் ஊழலில் பங்கு உண்டு என்று ஆ.ராசா கூறியுள்ளார். இதையெல்லாம் மீறி, தற்போது மீண்டும் திமுகவுடன் கூட்டணி அமைத்துக் கொண்டால், காங்கிரஸுக்கு என்ன கொள்கை இருக்கிறது? உண்மையில் இரண்டு கட்சிகளுக்குமே கொள்கை இல்லாமல் போய்விட்டது. கூட்டணியிலிருந்து வெளியேறியபோது, நன்றி கெட்டவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இப்போது நன்றி உள்ளவர்கள் ஆகிவிட்டார்களா என்ன?

வரும் தேர்தலில் என்னுடைய நிலைப்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக இப்போதே சொல்ல முடியாது. என்னுடைய ஆதரவாளர்களின் கருத்துகளைக் கேட்டு முடிவு எடுப்பேன். மு.க.ஸ்டாலின் நடத்தி முடித்துள்ள நமக்கு நாமே பயணம் காமெடி பயணம். ஆட்களைக் கூப்பிட்டு, இந்தக் கேள்வியைக் கேளுங்கள் என்று சொல்லி அரங்கேற்றப்படும் நாடகம். இதனால் பயன் எதுவும் ஏற்படப்போவது இல்லை என்று கூறியுள்ளார் அழகிரி.